தமிழ்நாடு

tamil nadu

இணையத்தை கலக்கும் கடல் இளவரசி.. மீனவப் பெண் டூ தொழில்முனைவோர்.. திரும்பி பார்க்க வைத்த சுபிக்‌ஷா! - THOOTHUKUDI YOUNG FISHING WOMAN

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jul 25, 2024, 3:22 PM IST

THOOTHUKUDI MEENAVA PONNU SUBIKSHA: மீனவப் பொண்ணு சுபிக்‌ஷா என்ற பெயரில் சமூக வலைத்தளங்களில் இயங்கி வரும் இளம்பெண், மீன் பிடித்தலை லாபகரமான தொழிலாக மாற்ற முயற்சி செய்து வருகிறார். இவரது மீன் ஊறுகாய் தமிழ்நாடு முழுவதும் தற்போது பரவலான வரவேற்பைப் பெற்று வருகிறது.

இளம்பெண் சுபிக்ஷா
இளம்பெண் சுபிக்ஷா (Credit - ETV Bharat Tamil Nadu)

தூத்துக்குடி: 'பிறந்துட்டோமா அப்ப வாழ்க்கையில் எதையாவது சாதிக்கணும். தமிழ்நாட்ல நம்ம பேரு தெரியனும்' என துள்ளளோடு சொல்லும் 22 வயதாகும் சுபிக்‌ஷா, பெண்கள் தன்னை பார்த்து வெளியே வரவேண்டும், பிடித்ததை செய்ய வேண்டும் என்ற முனைப்போடு ஓடிக்கொண்டிருக்கிறார்.

தூத்துக்குடி மாவட்டம் குலசேகரன்பட்டினம் அருகே உள்ளது பெரியதாழை என்ற மீனவ கிராமம். இங்கு ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வரும் நிலையில், 300க்கும் மேற்பட்டோர் நாட்டு படகு மூலம் கடலுக்கு சென்று மீன் பிடிக்கும் தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர். ஆண்கள் மட்டுமே கடலுக்கு சென்று மீன்பிடித்து வந்த நிலையை நீக்கி எல்லா துறையிலில் பெண்கள் சாதிக்கலாம் என தடைகளை தாண்டி கடலுக்கு மீன்பிடிக்க சென்று வருகிறார் இளம் பெண் சுபிக்‌ஷா.

சுபிக்‌ஷாவை அவரின் சொந்த ஊரான பெரியதாழை கிராமத்தில், ஈடிவி பாரத் தமிழ்நாடு ஊடகம் குழு சந்தித்தது. அப்போது, அவர் கடந்து வந்த பாதை குறித்தும், மீன் ஊறுகாய் தொழில் முன்னேற்றம் குறித்தும் கேட்க தொடங்கிய போது, சுபிக்‌ஷாவிடம் உற்சாகம் பொங்கியது. "தூத்துக்குடியில் உள்ள தனியார் மகளிர் கல்லூரியில் பி.ஏ. ஆங்கிலம் படிச்சிருக்கேன். கல்லூரி படிப்பை முடித்து விட்டு வாழ்க்கையில் என்ன செய்வது என்ன யோசித்த போது கடல் விலாகிங் (sea vlogging) செய்ய ஆசைப்பட்டேன்.

தமிழகத்தில் முதல் பெண் கடல் விலாகர் (Sea Vlogger) நான் என்றால் மிகவும் பெருமையாக தான் உள்ளது. ஆனால் அது எளிதில் கிடைத்துவிடவில்லை. அதற்கு பின்னால் மிக பெரிய வலிகள் இருக்கிறது" என சிரித்த முகத்தோடு நம்பிக்கையை வெளிப்படுத்தினார். "முதலில் அப்பாவிடம் கடலுக்கு வருவேன் என நான் கூறும் போது கூட்டி செல்ல மறுத்தார். அக்கம், பக்கத்தினர் எல்லோரும் கிண்டல் பண்ணினாங்க. ஆனால் நான் அதனை பெருட்படுத்தவில்லை.

அடம் பிடித்தேன். அப்போது அப்பா என்னை சமாதானப்படுத்த உன்னை கடலுக்கு கூப்பிட்டு செல்கிறேன் என கூறிவிட்டு, அதிகாலையில் எனக்கு தெரியாமல் கடலுக்கு சென்று விடுவார். இதனால் இரவு நேரங்களில் தூங்காமல் விழிப்புடன் இருப்பேன். அப்போது தான் அப்பா வேறு வழியின்றி என்னை கடல் தொழிலுக்கு கூட்டி சென்றார். அப்போது கூட சரி இன்று ஒரு நாள் வருவாள். பார்த்து கொள்ளலாம் என எண்ணினார் அப்பா, ஆனால் அவர் எண்ணத்தை தவிடு பொடியாக்கினேன்.

கடலுக்குள் முதன் முறையாக சென்றால் அந்த அலை, மற்றும் கடல் உப்பு காற்று சுவாசத்தினால் வாந்தி எடுப்பது வழக்கம், ஆனால் நான் வாந்தி எடுக்கவில்லை. இது எனக்கு மட்டுமல்ல, அனைவருக்கும் ஆச்சரியம், அதே போன்று அடுத்த நாள் சென்றேன், அதற்கடுத்த நாள் சென்றேன். தற்போது வரை 1 வருட காலமாக சென்று வருகிறேன்" என்றார்.

மேலும், பிறந்தோம், இறந்தோம் என்று இல்லாமல் பிறந்தால் சாதிக்க வேண்டும் என எண்ணினேன். அதற்கு பல தடைகளை தாண்ட வேண்டி இருந்தது. உடல் அளவிலும், மனதளவிலும் பிரச்னை இருந்தது. இருந்தாலும் அதனை ஒரு ஓரமாக வைத்து கொண்டு உன்னால் முடியும் என்று எனக்கு நானே நம்பிக்கை ஊட்டி இப்போது இந்த நிலையில் உள்ளேன்.

எப்பவுமே மன தைரியம் பெண்களுக்கும் இருக்க வேண்டும் என்பது என்னுடைய ஆசை. பெண்கள் என்றால் படிக்க வேண்டும், கல்லூரி முடிக்க வேண்டும், பின்னர் திருமணம் என்று இருப்பார்கள். அது தவறு, சாதிக்க வேண்டும் என்ற எண்ணத்துடன் இருக்க வேண்டும். பிறர் போல் இல்லாமல் என்னை போன்று, என்னை பார்த்து பெண்கள் வளர வேண்டும் என்பதே என்னுடைய ஆசை. என்னை பார்த்து நிறைய பெண்கள் முன்னே வருவார்கள் என்று நம்புவதாகவும் கூறினார் சுபிக்‌ஷா.

மீன் ஊறுகாய் பிசினஸ் எப்படி?:"வேறு என்ன செய்யலாம் என்று யோசித்த போது மீனில் ஊறுகாய் செய்யலாம் என நினைத்தேன். 'மீனவ பொண்ணு சுபி' என ஆரம்பித்து வஞ்சரம், சூரை, இறால், நண்டு போன்று 7 விதமான ஊறுகாய் செய்து கொடுக்கின்றேன். இதில், ஸ்பெஷல் ஊறுகாய் என்றால் கருவாடு தான்.

ஆரம்பத்தில் சுவையை கொண்டுவர சிரமப்பட்டேன். பணமும் நிறைய விரயம் ஆனது. அதன் பின், படிப்படியாக செய்து தற்போது தமிழகம் மட்டுமின்றி பெங்களூரு, டெல்லி என வெளிநாடுகளுக்கும் சென்று விட்டது" என மகிழ்ச்சியை பகிர்ந்து கொண்டார். சுபிக்‌ஷா தனது பயணத்தை சமூக ஊடகத்திலும் பகிர்ந்து வருகிறார். இவருக்கு இன்ஸ்டா பக்கத்தில் சுமார் 2 லட்சம் பின் தொடர்பாளர்கள் இருக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

சுபிக்‌ஷாவின் தந்தை குமார் நம்மிடையே பேசுகையில்,"என் மகள் கடலுக்கு போக ஆசைப்பட்டாள். அப்போது நான் கூட்டி கொண்டு போக மாட்டேன் என்று கூறுவேன். ஆனால் நான் வருவேன் என அடம் பிடித்து வருவாள். நானும் சரி என கடலுக்கு கூப்பிட்டு செல்வேன். அக்கம், பக்கத்தினர் 'ஏன் பொம்பள பிள்ளைய கடலுக்கு கூட்டிட்டு போற' என்பார்கள்.

ஆனால் சுபி யார் என்ன சொன்னால் என நான் வருவேன் என்று கடலுக்கு வருவாள். கிட்டத்தட்ட கடலுக்குள் 10 மைல் தூரம் மீன்பிடிக்க சென்று வருவோம். எந்த பிரச்னையும் கிடையாது" என்றார். பெண்கள் இளம் வயதில் பல கனவுகளை லட்சியமாக்க வேண்டும் என எண்ணுவது உண்டு. ஆனால் குடும்ப சூழ்நிலை காரணமாக திருமணம், குழந்தை என அடுத்தக்கட்டத்திற்கு சென்று பல நேரங்களில் லட்சியங்கள் கனவாக போய்கிறது.

ஆனால் எந்த சூழ்நிலை வந்தாலும், சாதிக்க வேண்டும், லட்சியத்தை அடைய வேண்டும் என எண்ணி வேதனைகளை சாதனைகளாக்கி பெண்களுக்கு நம்பிக்கையூட்டும் ஒளி விளக்காக திகழ்கிறார் மீனவ பொண்ணு சுபிக்‌ஷா என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை.

இதையும் படிங்க: முடிவுக்கு வருகிறதா மாஞ்சோலை ரஸ்க் கடை சகாப்தம்?.. 'எஸ்டேட் பேக்கரி' கடந்து வந்த பாதை..! - Manjolai Rusk

ABOUT THE AUTHOR

...view details