தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

திமுக சார்பாக மீண்டும் நீலகிரி தொகுதியில் களம் காணும் ஆ.ராசா... முழு தகவல் இங்கே! - lok sabha election 2024

Nilgiri DMK Candidate A.Rasa: திமுக சார்பில் நீலகிரி மாவட்ட வேட்பாளாராக நாடாளுமன்ற தேர்தலில் 4வது முறையாக ஆ.ராசா மீண்டும் போட்டியிடுகிறார்.

parliament election 2024
parliament election 2024

By ETV Bharat Tamil Nadu Team

Published : Mar 21, 2024, 7:32 AM IST

சென்னை: தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் உட்பட 40 தொகுதிகளில் அடுத்த மாதம் 19ஆம் தேதி ஒரே கட்டமாக நாடாளுமன்றத் தேர்தல் நடைபெறவுள்ளது. இந்த நிலையில் திமுக கூட்டணி தொகுதிப்பங்கீடு முடிவடைந்துள்ள நிலையில், தமிழ்நாட்டில் திமுக போட்டியிடும் 21 தொகுதிகளின் வேட்பாளர்கள் பட்டியலை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ளார். அதில், நீலகிரி மாவட்ட வேட்பாளராக 4வது முறையாக ஆ.ராசா மீண்டும் களம் காண்கிறார்.

யார் இந்த ஆ.ராசா?:பெரம்பலூர் மாவட்டம், வேலூர் கிராமத்தில் எஸ்.கே.ஆண்டிமுத்து, கிருஷ்ணம்மாள் தம்பதிக்கு மகனாக 23.05.1963 அன்று பிறந்தவர் ஆ.ராசா. தொடக்கக் கல்வியை வேலூரில் உள்ள அரசு ஆதிதிராவிட நல ஆரம்பப் பள்ளியில் 1973 வரையிலும், உயர்நிலைப் பள்ளிக் கல்வியை பாடாலூரிலுள்ள அரசுப் பள்ளியிலும் பயின்றார். தனது பட்டப்படிப்பை (B.Sc கணிதம்) முசிறி அறிஞர் அண்ணா கலைக் கல்லூரியிலும், சட்டப்படிப்பை (BL) மதுரை சட்டக்கல்லூரியிலும், முதுநிலை சட்டப்படிப்பை (ML) திருச்சியிலுள்ள அரசு சட்டக் கல்லூரியிலும் பயின்றார்.

வழக்கறிஞர் டூ அமைச்சர்: ஆ.ராசா கல்லூரியில் படிக்கும் போதே இருந்த அரசியல் ஈடுபாடு காரணமாக திமுக மாணவர் பிரிவில் சேர்ந்து தனது அரசியல் வாழ்க்கையைத் துவங்கியுள்ளார். படிப்பை வெற்றிகரமாக முடித்த ஆ.ராசா ஒரு வழக்கறிஞராகத் தனது பணியைத் துவங்கினார். பிறகு, பரமேஸ்வரி என்ற பெண்ணை 1996 ஏப்ரல் 4ஆம் தேதி திருமணம் செய்து கொண்ட நிலையில், தற்போது இவர்களுக்கு மயூரி என்ற மகள் ஒருவர் உள்ளார். மயூரி தற்போது, டெல்லியில் சட்டப்படிப்பு படித்து வருகிறார்.

மேலும், வழக்கறிஞராக இருந்த ஆ.ராசா முதன் முதலாக பெரம்பலூர் நாடாளுமன்றத் தொகுதியில் திமுக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்று, 11ஆவது மக்களவையில் நாடாளுமன்ற உறுப்பினராகத் தேர்வானார். பின்னர் 1999ல் நடைபெற்ற 13ஆவது மக்களவைக்கு நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலிலும், பெரம்பலூர் தொகுதியின் மக்களவை உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். தொடர்ந்து, வாஜ்பாய் தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் 1999 முதல் 2000ஆம் ஆண்டு வரை மத்திய ஊரக வளர்ச்சித்துறை இணை அமைச்சராகவும், 2003ஆம் ஆண்டு வரை மத்திய சுகாதாரத்துறை இணை அமைச்சராகவும் பதவி வகித்துள்ளார்.

அதனைத் தொடர்ந்து, 2004ஆம் ஆண்டு நடைபெற்ற 14ஆவது மக்களவைக்கான தேர்தலிலும் திமுக சார்பில் பெரம்பலூரில் மீண்டும் போட்டியிட்டு வெற்றி பெற்றார். டாக்டர் மன்மோகன் சிங் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசில் 2004 - 2007 ஆண்டு வரை மத்திய சுற்றுச்சூழல் துறை அமைச்சராகவும், பின்னர் 2007ஆம் ஆண்டு மே மாதம் மத்திய தொலைத் தொடர்பு மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சராகப் பொறுப்பேற்று 2009ஆம் ஆண்டு வரை பணியாற்றினார்.

தோல்வியே காணாத ஆ.ராசா ராஜினாமா: 2009ஆம் ஆண்டு நடைபெற்ற 15ஆவது மக்களவைக்கான தேர்தலில் திமுக சார்பில் நீலகிரி நாடாளுமன்றத் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்று மீண்டும் மத்திய தொலைத் தொடர்பு மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சராக ஜூன் 2009ஆம் ஆண்டு பொறுப்பேற்றுக் கொண்டார்.

பின்னர் எழுந்த 2ஜி விவகாரத்தில், முன்னாள் முதலமைச்சர் மு.கருணாநிதி ஆணையை ஏற்று ஜனநாயகத்தைக் காத்திடத் தனது அமைச்சர் பதவியை 2010 நவம்பர் 14ஆம் தேதி தனது பதவியை ராஜினாமா செய்தார். தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சியிலும், ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியிலும் ஆ.இராசா இளம் வயது மத்திய அமைச்சர்களில் ஒருவராக விளங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.

புத்தக விரும்பி: தனது கல்லூரி காலங்களில் பல்வேறு சமூக மற்றும் கலாச்சார நிகழ்வுகளில் பங்கு கொண்டுள்ளார். பெரியாரின் திராவிடர் கழகத்தின் கொள்கைகளில் பெரிதும் ஈடுபாடுக் கொண்டிருந்தார். முதன் முதலாகத் தனது பொது வாழ்க்கையில் திமுகவில் இணைந்து, பெரம்பலூர் ஒன்றிய செயலாளர், பின்னர் பெரம்பலூர் மாவட்டச் செயலாளராகவும் பொறுப்பு வகித்துள்ளார்.

பெரம்பலூர் டாக்டர் அம்பேத்கார் சிந்தனையாளர்கள் பேரவையின் தலைவராகவும், பெரம்பலூர் பகுத்தறிவாளர்கள் பேரவை மற்றும் தமிழ் இலக்கியப் பேரவையின் செயலாளராகவும் பணியாற்றியுள்ளார்.
ஆ.ராசா அதிக புத்தகங்களை விரும்பி படிப்பவர். இவர் ஒரு கவிஞரும் கூட, இவர் எழுதிய தமிழ் கவிதைகளைத் தொகுத்து 'ஒருசுயசரிதை' என்னும் தலைப்பில் புத்தகமாக வெளியிட்டுள்ளார்.

இந்திய அரசியலை உலுக்கிய 2ஜி விவகாரத்தில் மக்களுக்கு உண்மையை உரக்கச் சொல்லும் விதமாக, பத்திரிக்கைகளில் மிகவும் பிரபலமான '2ஜி அவிழும் உண்மைகள்' (தமிழ்) மற்றும் '2ஜி சகா அன்போல்ட்ஸ்' (2G Saga Unfolds) ஆங்கில புத்தகங்களை அண்மையில் வெளியிட்டுள்ளார். தற்போது நீலகிரி நாடாளுமன்ற உறுப்பினராகவும், திமுகவின் துணை பொதுச் செயலாளர் உள்ளார்.

இந்த நிலையில், இந்தியாவில் வரும் ஏப்ரல் 19ஆம் தேதி நடக்கவிருக்கும் 18ஆவது மக்களைவை தேர்தலில் திமுக சார்பில் மீண்டும் நீலகிரி மாவட்டத்தில் வேட்பாளராகப் போட்டியிட உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: திமுக வேட்பாளர் பட்டியலை வெளியிட்ட ஸ்டாலின் - தேர்தல் அறிக்கையையும் வெளியிட்டார்

ABOUT THE AUTHOR

...view details