கோயம்புத்தூர்: கோவை மாவட்டம், தொண்டாமுத்தூர் அருகே உள்ள தேவராயபுரத்தைச் சேர்ந்தவர் கார்த்திகேயன் (36). இவர் தனியார் இருசக்கர வாகன உறுதி பாகங்கள் நிறுவனத்தில் மண்டல அலுவலராக பணியாற்றி வருகிறார். இவருக்கு மனைவி, மூன்றாம் வகுப்பு படிக்கும் மகள், எல்.கே.ஜி படிக்கும் மகன் ஆகிய இரண்டு குழந்தைகள் உள்ளனர்.
இந்த நிலையில், இவர் அலுவலகப் பணியாக பெங்களூருக்கு சென்றிருந்தார். இந்நிலையில், இன்று (ஆகஸ்ட் 25) அதிகாலை அங்கு இருந்து கோவைக்கு ரயில் மூலம் வந்து, தனது இருசக்கர வாகனத்தை எடுத்துக் கொண்டு தொண்டாமுத்தூர் தேவராயபுரத்தில் உள்ள தனது வீட்டுக்குப் புறப்பட்டுள்ளார்.
அப்போது, பேரூர் அடுத்த தீத்திபாளையம் அருகே நடந்து வரும் மேம்பாலப் பணிக்காக தோண்டப்பட்ட பள்ளத்தில் கார்த்திகேயன் விழுந்தார். இதனால் அவருக்கு தலையில் பலத்த காயம் அடைந்துள்ளது. இதனையடுத்து, அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மேலும், இதுகுறித்து சாலையில் சென்றவர்கள் அளித்த தகவலின் பேரில் பேரூர் காவல் துறையினர் வந்து, அவரின் உடலைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.