புதுச்சேரி:புதுச்சேரியில் உள்ள தனியார் பள்ளியில் பணியாற்றும் வேதியியல் ஆசிரியர், அதே பள்ளியில் ஒன்றாம் வகுப்பு பயிலும் 6 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அதனால், ஆத்திரமடைந்த சிறுமியின் உறவினர்கள் மற்றும் பெற்றோர் பள்ளியை சூறையாடியதோடு, ஆசிரியரை சரமாரியாகத் தாக்கி சாலையில் இழுத்துச் சென்றனர். இந்த நிலையில், நேற்று (பிப்.14) ஆசிரியரைக் கைது செய்த போலீசார், தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
ஆறு வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை:
புதுச்சேரியில் உள்ள தனியார் பள்ளியில் ஒன்றாம் வகுப்பு (வயது 6) படிக்கும் சிறுமி, அதே பள்ளியில் பன்னிரண்டாம் வகுப்பிற்கு வேதியியல் பாடம் (Chemistry) கற்பிக்கும் ஆசிரியர் மணிகண்டனால் பாலியல் வன்புணர்வு ஆளாக்கப்பட்டுள்ளார். அதனால், சிறுமிக்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டுள்ளது.
அப்போது, மகளை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்ற பெற்றோர் பரிசோதனை செய்து பார்த்த போது, சிறுமி பாலியல் தொல்லைக்கு ஆளானது தெரிய வந்தது. அதனால் அதிர்ச்சியடைந்த பெற்றோர், சிறுமியிடம் விசாரித்துள்ளனர். அப்போது, "நான் பள்ளிக்குச் செல்ல மாட்டேன்" என சிறுமி அழுது அடம்பிடித்துள்ளார். அதனைத் தொடர்ந்து, சிறுமியிடம் பொறுமையாகக் கேட்டபோது, இந்த உண்மை அம்பலமாகியுள்ளது.
பள்ளியை சூறையாடிய உறவினர்கள்:
பின்னர், சிறுமியை பள்ளிக்கு அழைத்துச் சென்ற பெற்றோர் நியாயம் கேட்டுள்ளனர். அப்போது, வேதியியல் ஆசிரியர் மணிகண்டன் தான் தனக்கு பாலியல் தொல்லை கொடுத்தார் எனக் கூறியதோடு, சிறுமி அவரை அடையாளமும் காட்டியுள்ளார்.
இந்த சம்பவம் குறித்து தகவலறிந்த வந்த சிறுமியின் உறவினர்கள் மற்றும் பொதுமக்கள் ஆத்திரத்தில் தனியார் பள்ளியை சூறையாடினர். அதனைத் தொடர்ந்து, பள்ளிக்கு வெளியே சாலை மறியலிலும் ஈடுபட்டனர். அதனால், கடலூர் சாலையில் சுமார் ஐந்து கிலோமீட்டர் வரை போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. அதனைத் தொடர்ந்து, தகவலறிந்து வந்த போலீசார் அசம்பாவிதங்கள் எதுவும் நடக்காமல் தடுக்க பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனர்.