தூத்துக்குடி: தூத்துக்குடி தருவைகுளத்தை சேர்ந்த மகாராஜா மற்றும் தேனிலா ஆகியோரின் இரண்டு விசைப்படகுகளில் தலா 22 மீனவர்கள் கடந்த 20ஆம் தேதி ஒரு படகிலும், 23ஆம் தேதி ஒரு படகிலும் மீன்பிடிக்க சென்றனர். அவர்களை விசாரணைக்கு என இலங்கை கடற்படையினர் அழைத்து பின்னர் எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கடந்த 5 ஆம் தேதி அன்று மன்னார் தெற்கு கடற்பரப்பில் வைத்து கைது செய்தனர்.
பின்னர், தூத்துக்குடி மாவட்ட மீனவர்கள் 22 பேரையும் நேற்று (ஆகஸ்ட் 6) புத்தளம் மாவட்டம் கல்பிட்டி சுற்றுலா நீதிமன்றத்தில் கல்பிட்டி மீன் வளத்துறையினர் ஆஜர்படுத்தினர். அப்போது வழக்கை விசாரித்த நீதிபதி இவோனா விமலரத்னா, மீனவர்கள் 22 பேரையும் வரும் 20ம் தேதி வரை வாரியபொல சிறையில் அடைக்க உத்தரவிட்டார். இதனையடுத்து மீனவர்கள் 22 பேரும் நேற்று வாரியாபொல சிறைச்சாலையில் அடைக்கப்பட்டனர்.