தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

நாளை தொடங்குகிறது பிளஸ் 2 பொதுத்தேர்வு.. கட்டுப்பாட்டு அறை எண்கள் அறிவிப்பு! - 12th Exam control room number

12th Std Public Exam: 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு நாளை தொடங்கவுள்ளது. தேர்வறையில் செல்போன் எடுத்துச்செல்ல மாணவர்களுக்கும், ஆசிரியர்களுக்கும் தேர்வுத்துறை தடை விதித்துள்ள நிலையில், அதனை மீறினால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என தேர்வுத்துறை எச்சரித்துள்ளது.

Etv Bharat
Etv Bharat

By ETV Bharat Tamil Nadu Team

Published : Feb 29, 2024, 1:00 PM IST

சென்னை:தமிழ்நாட்டில் மாநில பாடத்திட்டத்தில் படிக்கும் மாணவர்களுக்கான பொதுத்தேர்வு 12ஆம் வகுப்பிற்கு மார்ச் 1ஆம் தேதி முதல் 22ஆம் தேதி வரையிலும், 11ஆம் வகுப்பிற்கு மார்ச் 4ஆம் தேதி முதல் 25ஆம் தேதி வரையிலும், 10ஆம் வகுப்பிற்கு மார்ச் 26ஆம் தேதி முதல் ஏப்ரல் 8ஆம் தேதி வரையிலும் நடைபெறுகிறது.

பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கான செய்முறைத் தேர்வுகள் 12ஆம் வகுப்பிற்கு பிப்ரவரி 12ஆம் தேதி முதல் 17ஆம் தேதி வரையிலும், 11ஆம் வகுப்பிற்கு பிப்ரவரி 19ஆம் தேதி முதல் 24ஆம் தேதி வரையிலும், 10ஆம் வகுப்பு மாணவர்களுக்கான அறிவியல் செய்முறைத்தேர்வு பிப்ரவரி 23ஆம் தேதி முதல் 29ஆம் தேதி வரையிலும் நடத்தி முடிக்கப்பட்டுள்ளது.

12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு நாளை (மார்ச்.1) தமிழ் தேர்வும், மார்ச் 5ஆம் தேதி ஆங்கிலத் தேர்வும், மார்ச் 8ஆம் தேதி கணினி அறிவியல், உயிரி அறிவியல், புள்ளியியல் தேர்வும், மார்ச் 11ஆம் தேதி வேதியியல், புவியியல், கணக்குப்பதிவியல் தேர்வும், மார்ச் 15ஆம் தேதி இயற்பியல், பொருளாதாரம், கணினி தொழில்நுட்பம் தேர்வும், மார்ச் 19ஆம் தேதி கணிதம், விலங்கியல், நுண் அறிவியல் தேர்வுகளும் நடைபெறும் என தேர்வுத்துறை அறிவித்துள்ளது.

பொதுத்தேர்வினை நடத்துவதற்கு உரிய முன்னேற்பாடுகளை அரசுத் தேர்வுத்துறை இயக்குனரகம் செய்துள்ளது. 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வினை தமிழகம் மற்றும் புதுச்சேரியில் சுமார் 7.25 லட்சம் மாணவர்கள் 3ஆயிரத்து 302 மையங்களில் தேர்வினை எழுத உள்ளனர். இதற்காக 154 இடங்களில் கேள்வித்தாள் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளது. மேலும் ஆயிரத்து 135 பறக்கும் படையினரும், தேர்வினை கண்காணிக்கும் பணியில் 43 ஆயிரத்து 200 பேரும் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

சென்னை மாநகரில் உள்ள 591 பள்ளிகளில் படிக்கும் 62 ஆயிரத்து 124 மாணவர்கள் 240 மையங்களில் தேர்வினை எழுதுகின்றனர். தேர்வினை கண்காணிக்கும் முதன்மைக் கண்காணிப்பாளர்களாக 265 பேரும், துறை அலுவலர்களாக 275 பேரும், அறை கண்காணிப்பாளர்களாக 3200 பேரும், பறக்கும் படையில் 620 பேரும் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

அதே போல் வேலூர், கடலூர், சேலம், கோயம்புத்தூர், மதுரை, பாளையங்கோட்டை, திருச்சிராப்பள்ளி, புழல் சிறையில் உள்ளவர்களும் தேர்வு எழுதுவதற்கு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளது. மாற்றுத்திறனாளி தேர்வர்களுக்கு சலுகை விதிகள் வழங்கப்பட்டுள்ளன. தேர்வுப் பணியில் அனைத்து நிலைகளிலும் தகுந்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

வினாத்தாள் கட்டுக்காப்பு மையங்கள் பாதுகாப்பான இடங்களில் அமைக்கப்பட்டு, அங்கு 24 மணி நேரமும் ஆயுதம் தாங்கிய காவலர் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. பொதுத்தேர்வுக்கான அறை கண்காணிப்பாளர் பணியில் 47 ஆயிரம் ஆசிரியர்கள் ஈடுபடுத்தப்பட உள்ளனர். தேர்வு மையங்களில் குடிநீர், இருக்கை, மின்சாரம், காற்றோட்டம், வெளிச்சம் மற்றும் கழிப்பிட வசதிகளை சிறப்பான முறையில் அமைத்திட ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

தேர்வு மையங்களில் தடையற்ற மின்சாரம் வழங்கிட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மேலும் தேர்வு எழுதும் மாணவர்களுக்கு பல்வேறு விதிமுறைகளும் விதிக்கப்பட்டுள்ளன. ஹால் டிக்கெட்டில் கூறப்பட்டுள்ள விதிமுறைகளை மாணவர்கள் கட்டாயம் கடைபிடிக்க வேண்டும் என தேர்வுத்துறை கூறியுள்ளது. தேர்வு மைய வளாகத்திற்குள் செல்போன் எடுத்து வருதல் முற்றிலும் தடை செய்யப்பட்டுள்ளது.

தேர்வர்கள் தங்களுடன் செல்போன் கண்டிப்பாக எடுத்து வருதல் கூடாது. மேலும் தேர்வர்களது அலைபேசிகள் பராமரிப்பிற்கு தேர்வு மையங்கள் பொறுப்பேற்காது. அத்துடன் தேர்வு பணியில் ஈடுபடும் ஆசிரியர்கள் தேர்வறையில் தங்களுடன் செல்போன் வைத்திருப்பதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

இவ்வறிவுரையை மீறி தேர்வர்களோ அல்லது ஆசிரியர்களோ செல்போன் மற்றும் இதர தகவல் தொடர்பு சாதனங்களை வைத்திருப்பதாக கண்டறியப்பட்டால் கடுமையான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என தேர்வுத்துறை எச்சரித்துள்ளது. தேர்வர்களின் சந்தேகங்களை தீர்ப்பதற்காக, தேர்வு நடைபெறும் நாட்களில் தேர்வுக் கட்டுப்பாட்டு அறை அரசுத் தேர்வுத்துறை இயக்குநர் அலுவலகத்தில் அமைக்கப்பட்டு உள்ளது. மேலும், 91 9498383076 மற்றும் +91 9498383075 என்ற இரண்டு கட்டுப்பாட்டு அறை எண்கள் அறிவிக்கப்பட்டு உள்ளது.

இதையும் படிங்க:மார்ச் 3-ல் போலியோ சொட்டு மருந்து முகாம்: கவனிக்க வேண்டிய முக்கிய அம்சங்கள்!

ABOUT THE AUTHOR

...view details