சென்னை:11ஆம் வகுப்பு பொதுத் தேர்வு எழுதிய மாணவர்களுக்கு மே 30ஆம் தேதி விடைத்தாள் நகல் வெளியாக உள்ளதாக அரசுத் தேர்வுகள் இயக்ககம் இன்று (மே 28) அறிவித்துள்ளது. மேலும், மறுகூட்டல் அல்லது மறுமதிப்பீட்டிற்கு விண்ணப்பிக்க விரும்பும் மாணவர்களுக்கான வழிகாட்டுதல்கள் மற்றும் விதிமுறைகள் குறித்தும் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
இது குறித்து வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், “இந்த ஆண்டு 11ஆம் வகுப்பு பொதுத் தேர்வு எழுதி விடைத்தாள் நகல் கோரி விண்ணப்பித்த மாணவர்கள், தங்களது விடைத்தாள் நகலினை மே 30ஆம் தேதி பிற்பகல் 3 மணி முதல் www.dge.tn.gov.in என்ற இணையதளத்திற்குச் சென்று, தங்களது பதிவெண் மற்றும் பிறந்த தேதியினைப் பதிவு செய்து, விண்ணப்பித்த பாடங்களுக்குரிய விடைத்தாள்களின் நகலினை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
விடைத்தாள்களின் நகலினை பதிவிறக்கம் செய்த பிறகு, மறுகூட்டல்-II அல்லது மறுமதிப்பீட்டிற்கு விண்ணப்பிக்க விரும்பினால், இதே இணையதளத்தில் "Application for Retotalling / Revaluation" என்ற தலைப்பினை கிளிக் செய்து வெற்று விண்ணப்பத்தினைப் பதிவிறக்கம் செய்து கொள்ள வேண்டும்.
தேர்வர்கள் இவ்விண்ணப்பப் படிவத்தினை பூர்த்தி செய்து, இரு நகல்கள் எடுத்து மே.31 ம் தேதி காலை 11 மணி முதல் ஜூன் 4 மாலை 5 மணி வரை (ஜூன் 2 ஞாயிற்றுக் கிழமை நீங்கலாக) சம்பந்தப்பட்ட மாவட்ட அரசுத் தேர்வுகள் உதவி இயக்குநர் அலுவலகத்தில் ஒப்படைக்க வேண்டும். மறுகூட்டல் மற்றும் மறுமதிப்பீட்டிற்கான கட்டணத்தினை மாவட்ட அரசுத் தேர்வுகள் உதவி இயக்குநர் அலுவலகத்தில் பணமாகச் செலுத்த வேண்டும்.