தேனி:பெரியகுளம் அருகே தொடர் கனமழை காரணமாக உருட்டி குளத்திலிருந்து உபரி நீர் வெளியே செல்ல முடியாமல் விலை நிலங்களுக்குள் புகுந்ததால், சுமார் 100 ஏக்கர் நடவு செய்த நெற்பயிர் நீரில் மூழ்கி சேதம் அடைந்துள்ளதாக விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனர்.
தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே கீழவடகரை பகுதியில் உள்ள ஆண்டி குளத்தில் இருந்து வெளியேறும் உபரிநீர்கள் அப்பகுதியில் உள்ள உருட்டி குளத்துக்கு வருகின்றனர். இந்த நிலையில், தொடர் கன மழை காரணமாக நீர்வரத்து அதிகரித்து ஆண்டிகுளம் நிறைந்து உபரி நீர் அதிகளவில் வெளியேறி, கீழுள்ள உருட்டி குளத்திற்கு வந்த நிலையில், உருட்டி குளம் முழுவதும் நிரம்பி உபரி நீர் செல்ல வழி இல்லாமல் அப்பகுதியில் உள்ள 100க்கும் மேற்பட்ட விளைநிலங்களுக்குள் புகுந்து நடவு செய்யப்பட்ட நெற்பயிர்களை சூழ்ந்துள்ளது.
பருவமழையால் விவசாயிகள் தொடர்ந்து பாதிக்கப்படுவதாக அப்பகுதி விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனர். இது குறித்து அப்பகுதியில் விவசாயிகள் பலமுறை பொதுப்பணித்துறை அதிகாரிகளிடம் புகார் அளித்தும் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை என கூறப்படுகிறது. இதனால், ஆண்டுதோறும் மழைக் காலங்களில் உருட்டி குளத்தில் இருந்து உபரி நீர் வெளியே செல்ல முடியாமல் விலை நிலங்களுக்குள் வருவதால் முற்றிலும் நடவு செய்யும் நெல் பயிர்கள் சேதம் அடைவதாக அப்பகுதி நெல் விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனர்.