சென்னை: இங்கிலாந்து அணி இந்தியா சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. ஐந்து 20 ஓவர் போட்டிகளில் விளையாட உள்ளது. முதல் போட்டி 22 ஆம் தேதி கொல்கத்தாவில் உள்ள ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெற்றது. இதில் முதலில் விளையாடிய இங்கிலாந்து அணி 10 விக்கெட் இழப்பிற்கு 132 ரன்கள் எடுத்திருந்தது. பின்னர் 133 என்ற இலக்கை நோக்கி ஆடிய இந்திய அணி 12.5 ஓவர்களில் மூன்று விக்கட்டுகளை இழந்து 133 ரன்கள் எடுத்து 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
முதல் போட்டியில் தமிழ்நாட்டை சேர்ந்த வருண் சக்ரவர்த்தி 4 ஓவர் வீசி 23 ரன்களை விட்டுக் கொடுத்து 3 விக்கெட்டை கைப்பற்றியதால் ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார். தொடரின் 2வது போட்டி சென்னையில் நாளை நடைபெற இருக்கிறது. இந்த போட்டிக்கான ஏற்பாடுகள் தற்போது தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இங்கிலாந்து மற்றும் இந்திய அணிகளின் வீரர்கள் தீவிர வலைப்பயிற்சியில் இன்று ஈடுபட்டனர்.
அப்போது இந்திய சுழற்பந்து வீச்சாளர் வருண் சக்ரவர்த்தி செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:
மீண்டும் சென்னையில் விளையாடுவது மகிழ்ச்சி. என் குடும்பம் மற்றும் நம் மக்கள் முன் விளையாடுவதில் மகிழ்ச்சியாக உணர்கிறேன். இந்திய அணியில் தற்போது உள்ள வீரர்கள் சிறப்பானவர்கள். எப்பொழுதுமே இந்திய அணிக்கு விளையாட தயாராக இருக்கிறேன். நான் சிறப்பாக விளையாடுவதற்கு பிட்ச் மற்றும் சூழ்நிலை சரியாக இருந்தது. ஆனால் இது எதுவும் என்னுடைய கையில் இல்லை. சரியான சூழ்நிலை அமைந்ததால் நன்றாக விளையாட முடித்தது. விளையாடும் போது மைதானத்தைப் பொறுத்து போட்டிகள் மாறும்.