இந்தியா VS பாகிஸ்தான் போட்டி: கிரிக்கெட் ரசிகர்கள் கூட்டத்தால் 'மினி சேப்பாக்கம்' ஆக மாறிய சென்னை மெரினா! - LED SCREEN IN CHENNAI MARINA BEACH
ஐசிசி சாம்பியன்ஸ் டிராஃபி தொடரில் இந்தியா - பாகிஸ்தான் அணிகள் மோதி வரும் இன்றைய போட்டி, மெரினா கடற்கரையில் எல்இடி திரைகள் அமைக்கப்பட்டு நேரலை செய்யப்பட்டு வருகிறது. இதனை பல்லாயிரக்கணக்கான ரசிகர்கள் கண்டுகளிக்கின்றனர்.
சென்னை மெரினா கடற்கரையில் அமைக்கப்பட்டுள்ள எல்இடி திரைகள் (ETV Bharat Tamil Nadu)
சென்னை:ஐசிசி சாம்பியன்ஸ் டிராஃபிக்கான இன்றைய போட்டியில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதி வருகின்றன. இந்திய - பாக்கிஸ்தான் போட்டி என்றாலே ஒட்டுமொத்த நாடும் பெரும் ஆர்வத்துடன் காணும். துபாயில் நடைபெறும் இந்தப் போட்டியில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி முதலில் பேட்டிங் செய்ய தீர்மானித்து களமிறங்கியது.
இந்த போட்டியை சென்னை மெரினா கடற்கரையில் நேரலையில் ஒளிபரப்ப தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் ஏற்பாடு செய்தது. இதுதொடர்பாக தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் தனது எக்ஸ் வலைதள பக்கத்தில், “துபாயில் நடைபெறவுள்ள இந்தியா - பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான போட்டியை மெரினா மற்றும் பெசன்ட் நகர் கடற்கரைகளில் நேரலையில் ஒளிபரப்ப தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் ஏற்பாடு செய்துள்ளது. எனவே, பொதுமக்கள் அவர்களது நண்பர்கள் மற்றும் குடும்பத்தினருடன் போட்டியை கண்ு களிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்” என பதிவிட்டது.
கிரிக்கெட் ரசிகர்கள் பேட்டி (ETV Bharat Tamil Nadu)
மெரினாவில் குவிந்த ரசிகர்கள்:
அந்த வகையில் இந்தியா - பாகிஸ்தான் போட்டி துபாயில் நடந்தாலும் ரசிகர்கள் ஒன்றிணைந்து காணும் வகையில், சென்னை மெரினா மற்றும் பெசன்ட் நகர் கடற்கரையில் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் போட்டியை பெரிய எல்இடி திரையில் நேரடியாக ஒளிபரப்பு செய்ய பிரத்யேக ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அதன்படி, கிரிக்கெட் போட்டியை காண ஏராளமான பொதுமக்கள் மற்றும் ரசிகர்கள் மெரினாவுக்கு வருகை புரிந்து, போட்டியை ஒன்றாக இணைந்து அனைவரும் கண்டு ரசித்தனர்.
வண்ணம் பூசிக்கொண்ட ரசிகர்கள் (ETV Bharat Tamil Nadu)
மேலும், மெரினாவுக்கு வருகை புரிந்துள்ள ரசிகர்கள், அங்கு விற்பனை செய்யப்படும் இந்திய அணியின் டி- சர்ட்கள், கேப்கள், இந்திய கொடி, குடை ஆகியவற்றை வாங்கி அணிந்து போட்டியை கண்டுகளித்தனர். தொடர்ந்து, இந்திய கொடியின் வண்ணங்களை முகத்தில் பூசுவது போன்ற செயலிலும் ரசிகர்கள் ஈடுபட்டதால்,. மெரினா கடற்கரை இன்று மாலை, மினி சேப்பாக்கம் கிரிக்கெட் ஸ்டேடியம் போல காட்சியளித்தது.
சென்னை மெரினாவில் போட்டியை கண்டு ரசித்த ரசிகர்கள் (ETV Bharat Tamil Nadu)
இதுகுறித்து, போட்டியை காண மெரினாவிற்கு வந்த அக்பர் என்பவர் ஈடிவி பாரத் தமிழுக்கு சிறப்பு பேட்டி அளித்தார். அப்போது பேசிய அவர், “வீட்டில் இருந்து போட்டிடை காண்பதைவிட ரசிகர்களுடன் ஒன்றிணைந்து பார்ப்பது மகிழ்ச்சியாக உள்ளது. இந்தப் போட்டியில் இந்தியா நிச்சயமாக வெற்றி பெறும்.
இந்தியா இத்தொடரை வெற்றியுடன் துவங்கியது. ஆனால், பாகிஸ்தான் தோல்வியுடன் தொடங்கியது. இந்தியாவின் பந்துவீச்சு சிறப்பாக உள்ளது. இத்னால், பாகிஸ்தான் வீரர்களுக்கு சிரமமாக உள்ளது. பாகிஸ்தான் இப்போட்டியில் தோல்வி அடைந்தால் அவர்களுக்கு பெரும் இழப்பாகும். இந்தியா - பாகிஸ்தான் போட்டி என்றாலே பெரும் எதிர்பார்ப்பு உண்டு. உலகமே எதிர்பார்த்து காத்துக்கொண்டிருக்கிறது” என்றார்.
தொடர்ந்து, அசீன் என்பவர் கூறுகையில், “ தற்போது வரை போட்டி மெதுவாக சென்று கொண்டிருக்கிறது. வீட்டில் பார்ப்பதைவிட அனைவருடனும் ஒன்றிணைந்து பார்க்கும்போது மகிழ்ச்சியாக உள்ளது. ஸ்டேடியத்தில் பார்ப்பதைப் போன்று இல்லாமல் இருந்தாலும், ரசிகர்களுடன் ஒன்றாக பார்ப்பது நன்றாக உள்ளது. ” என்று மகிழ்ச்சி பொங்க அவர் கூறினார்.