தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sports

மீண்டும் துணை கேப்டனான பும்ரா! முகமது ஷமி நீக்கத்திற்கு என்ன காரணம்?

நியூசிலாந்து டெஸ்ட் தொடருக்கான இந்திய அணியின் துணை கேப்டனாக ஜஸ்பிரீத் பும்ரா நியமனம். முகமது ஷமிக்கு மீண்டும் வாய்ப்பு வழங்கப்படவில்லை.

By ETV Bharat Sports Team

Published : 4 hours ago

Etv Bharat
Indian Team (Photo Credit: X/@BCCI)

ஐதராபாத்:நியூசிலாந்து அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடரில் விளையாடுகிறது. இந்த தொடருக்கான இந்திய அணியை பிசிசிஐ அறிவித்துள்ளது. இதில் துணை கேப்டனாக ஜஸ்பிரீத் பும்ரா மீண்டும் அறிவிக்கப்பட்டுள்ளார்.

துணை கேப்டன் பும்ரா:

சமீபத்தில் நடந்து முடிந்த வங்கதேச அணிக்கு எதிரான இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் போது பும்ரா இந்திய அணியின் துணை கேப்டனாக அறிவிக்கப்படவில்லை. அதேநேரம் இந்த ஆண்டு துவக்கத்தில் நடைபெற்ற தென் ஆப்பிரிக்கா மற்றும் இங்கிலாந்து டெஸ்ட் கிரிக்கெட் தொடர்களின் போது பும்ரா இந்திய டெஸ்ட் அணியின் துணை கேப்டனாக இருந்தார்.

ஆனால், வங்கதேச டெஸ்ட் தொடருக்கு துணை கேப்டனாக யாரையும் அறிவிக்காததால் ஒருநாள் அணி மற்றும் டி20 அணியின் துணை கேப்டனாக இருக்கும் சுப்மன் கில்லை டெஸ்ட் அணியின் துணை கேப்டனாக நியமிக்க முயற்சி நடக்கிறதா என்ற சந்தேகம் அனைவருக்கும் இருந்தது.

பார்டர் கவாஸ்கர் தொடருக்கு யார் கேப்டன்?:

இருப்பினும் வங்கதேச தொடரில் யாருக்கு துணை கேப்டன் பதவி வழங்கப்படவில்லை. இந்நிலையில், இந்திய அணியின் துணை கேப்டனாக பும்ரா மீண்டும் நியமிக்கப்பட்டு இருப்பது சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது. நியூசிலாந்து தொடருக்கு பின் இந்திய அணி ஆஸ்திரேலியா சுற்றுப்பயணம் மேற்கொண்டு பார்டர் கவாஸ்கர் தொடரில் பங்கேற்கிறது.

அந்த தொடரின் துவக்கத்தில் ஒன்று அல்லது இரண்டு போட்டிகளில் ரோகித் சர்மா பங்கேற்க மாட்டார் எனக் கூறப்படுகிறது. அந்த சமயத்தில் யார் இந்திய அணியின் கேப்டனாக யார் செயல்படுவார் என்ற சந்தேகம் ஏற்படும் என்பதற்காக, அதை தெளிவுபடுத்தும் வகையில் நியூசிலாந்து தொடரில் துணை கேப்டனாக பும்ரா நியமிக்கப்பட்டு இருப்பதாக சொல்லப்படுகிறது.

இந்திய அணியில் அஸ்வின்:

அதேநேரம் நியூசிலாந்து தொடரிலும் சீனியர் வீரர் முகமது ஷமிக்கு வாய்ப்பு வழங்கப்படவில்லை. ஒருநாள் உலக கோப்பை கிரிக்கெட் தொடருக்கு பின்னர் முகமது ஷமி இந்திய அணிக்கு திரும்பவில்லை. மற்றபடி வங்கதேச தொடரில் ஜொலித்த பெரும்பாலான வீரர்களுக்கு நியூசிலாந்து தொடரில் மீண்டும் வாய்ப்பு வழங்கப்பட்டு உள்ளது. வங்கதேச டெஸ்ட் தொடரின் தொடர் நாயகன் ரவிச்சந்திரன் அஸ்வின் மீண்டும் அணியில் இணைந்துள்ளார்.

வரும் 16ம் தேதி முதலாவது டெஸ்ட் போட்டி பெங்களூருவில் நடைபெறுகிறது. அதைத் தொடர்ந்து இரண்டாவது டெஸ்ட் போட்டி 24ஆம் தேதி புனேவிலும் மூன்றாவது மற்றும் கடைசி டெஸ்ட் கிரிக்கெட் போட்டி நவம்பர் 1ஆம் தேதி மும்பை வான்கடே மைதானத்திலும் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

நியூசிலாந்து தொடருக்கான இந்திய அணி: ரோகித் சர்மா (கேப்டன்), ஜஸ்பிரித் பும்ரா (துணை கேப்டன்), யஷஸ்வி ஜெய்ஸ்வால்,சுப்மான் கில், விராட் கோலி, கே.எல் ராகுல், சர்பராஸ் கான், ரிஷப் பந்த் (விக்கெட் கீப்பர்), துருவ் ஜூரல் (விக்கெட் கீப்பர்), ரவிச்சந்திரன் அஸ்வின், ரவீந்திர ஜடேஜா, அக்சர் படேல், குல்தீப் யாதவ், முகமது சிராஜ், ஆகாஷ் தீப்

இதையும் படிங்க:ராபின் உத்தப்பா தலைமையில் இந்திய அணி அறிவிப்பு! Hong Kong Sixes Tournament!

ABOUT THE AUTHOR

...view details