தமிழ்நாடு

tamil nadu

அடி மாட்டு விலையில் நெய்! திருப்பதி லட்டு கலப்படத்திற்கு இது தான் காரணமா? - Tirupti laddu controversy explained

By ETV Bharat Tamil Nadu Team

Published : 5 hours ago

திருப்பதி திருமலை லட்டு பிரசாதத்தில் மாட்டு கொழுப்பு மற்றும் பன்றி கொழுப்பு பயன்படுத்தப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்திருக்கும் நிலையில், மலிவு விலையில் நெய் கொள்முதல் செய்யப்பட்டதற்கான ஆதாரங்களும் வெளி வந்துள்ளன.

திருப்பதி லட்டு
திருப்பதி லட்டு (Credits - ETV Bharat)

ஐதராபாத்: ஏழுமலையானுக்கு நேரடி நிவேதனத்திற்காக நெய் ஒரு கிலோ ரூ.1,667க்கு வாங்கப்பட்ட நிலையில், பக்தர்களுக்கான பிரசாதம் தயாரிக்க வாங்கப்படும் நெய் கிலோ ஒன்று ரூ.320-க்கு மட்டுமே வாங்கப்பட்டது தெரிய வந்துள்ளது. லட்டு பிரசாதத்தில் மாட்டுக் கொழுப்பு, பன்றி கொழுப்பு, மீன் எண்ணெய் உள்ளிட்ட கலப்படங்கள் இருப்பதாக எழுந்த குற்றச்சாட்டு குறித்து திருமலை தேவஸ்தான நிர்வாகக் குழுவின் முன்னாள் தலைவரான ஒய்.வி.சுப்பாரெட்டி விளக்கம் அளித்தார்.

அவரது பேட்டியில் ஏழுமலையான் கோயிலுக்கான நிவேதனப் பொருட்கள் வாங்குவதில் கடும் சிரத்தையுடன் செயல்படுவதாகக் கூறியிருந்தார். ராஜஸ்தான் மாநிலத்தின் ஃபதேபூரில் இயங்கி வரும் நாட்டு மாட்டு பண்ணையிலிருந்து நாள்தோறும் 60 கிலோ நெய் நன்கொடையாளர்கள் உதவியுடன் வாங்கப்பட்டதாக அவர் சுட்டிக்காட்டினார். இதற்காக நெய் ஒரு கிலோவுக்கு ரூ.1,667 செலவிடப்பட்டதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

Tirupati Temple (ETV Bharat)

இதையும் படிங்க:"திருப்பதி லட்டு தயாரிப்பு நெய்யில் கலப்படம்" - திருமலை திருப்பதி தேவஸ்தானமும் ஒப்புதல்!

அதே நேரத்தில் பக்தர்களுக்கான பிரசாத லட்டு தயாரிப்பதற்காக ஆயிரக்கணக்கான லிட்டர் நெய் ரூ.320 விலையில் வாங்கப்பட்டுள்ளது. இரண்டுமே கலப்படம் இல்லாத நெய் எனில் குறைந்த விலையில் எப்படி வாங்க முடியும் என்ற கேள்வி எழுந்துள்ளது. பொதுவாக துறை சார்ந்த நிபுணர்களின் கருத்துப்படி ஒரு கிலோ நெய் தயாரிக்க 17 முதல் 18 லிட்டர் பால் தேவைப்படுகிறது. ஒரு லிட்டர் பாலின் விலை 40 ரூபாய் என வைத்துக் கொண்டாலுமே, ஒரு கிலோ நெய்யின் அடக்க விலை சுமார் ரூ.720 வரை வருகிறது. எருமை மாட்டு நெய்யின் விலை கிலோவுக்கு ரூ.800 வரை சந்தையில் விற்கப்படுகிறது.

நிலைமை இவ்வாறு இருக்கையில் தொலைதூர மாநிலங்களிலிருந்து கிலோ ரூ.320க்கு எப்படி நெய் வழங்க முடியும். போக்குவரத்து உள்ளிட்ட செலவீனங்களை கணக்கிடுகையில் இது சாத்தியமில்லாத விலையாக உள்ளது. இந்த விலையில் நெய் வாங்கினால் கலப்படம் இருக்கும் என்பதை சாதாரண மக்களாலும் கூட புரிந்து கொள்ள முடியும். இது திருமலை நிர்வாகத்தில் இருந்தவர்களுக்கு தெரியாமல் போனது ஆச்சரியம் தான்.

Tirupati laddu (ETV Bharat)

தமிழ்நாட்டில் ஆவின் இருப்பதைப் போன்று கர்நாடகாவில் அரசு சார்பில் நந்தினி கூட்டுறவு பால் நிறுவனம் இயங்கி வருகிறது. இந்நிறுவனத்தின் சார்பில் திருமலை திருப்பதி தேவஸ்தானத்திற்கு 50 ஆண்டுகளாக நெய் வழங்கப்பட்டு வந்தது. ஆனால் குறைந்த விலைக்கு நெய் கேட்டதால் கர்நாடகா பால் கூட்டுறவு சங்கம் இந்த போட்டியிலிருந்து ஓரங்கட்டப்பட்டது. அப்போதே தேவஸ்தானம் கேட்கும் விலைக்கு தங்களால் நெய் தர முடியாது என நந்தினி நிறுவனத்தின் தலைவர் பீம்நாயக் விளக்கம் அளித்திருந்தார்.

திருமலை திருப்பதி தேவஸ்தானத்திற்கு தரம் குறைவான நெய் வழங்கியதாக திண்டுக்கல்லில் இயங்கி வரும் ஏ.ஆர்.டெய்ரி நிறுவனம் மீதும் குற்றம் சாட்டப்பட்டது. கடந்த ஜூலை மாதத்தில் இந்நிறுவனத்தை கறுப்புப் பட்டியலில் சேர்ப்பதாக திருமலை திருப்பதி தேவஸ்தான நிர்வாகம், அறிவித்திருந்தது. 8.50 லட்சம் கிலோ நெய் வழங்க ஒப்பந்தம் மேற்கொண்டிருந்த நிலையில் 68 கிலோ நெய் ஏ.ஆர். டெய்ரி நிறுவனத்தால் வழங்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க:"எங்க நெய் சுத்தமானது" - திருப்பதி லட்டுக்கு நெய் கொடுத்த தமிழ்நாடு நிறுவனம் விளக்கம்!

ABOUT THE AUTHOR

...view details