தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / opinion

தலைநகரில் இருந்து ஆம் ஆத்மியை துடைப்பத்தால் துடைத்தெறிந்த பா.ஜ.க! - DELHI ELECTION RESULT OPINION

2025 டெல்லி தேர்தல்: 27 ஆண்டுகளுக்குப் பிறகு டெல்லியில் பாஜக ஆட்சிக்கு வந்தது. அதே நேரம் ஒரு தசாப்தத்திற்குப் பிறகு ஆம் ஆத்மி ஆட்சி முடிவுக்கு வந்ததுள்ளது.

மோடி கோப்புப்படம்
மோடி கோப்புப்படம் (ANI)

By Bilal Bhat

Published : Feb 9, 2025, 11:09 AM IST

டெல்லி சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகள், ஆம் ஆத்மி கட்சியை சிறிய கட்சியாக மாற்றி, தேசிய தலைநகரின் சட்டப்பேரவை வரைபடத்தில் காங்கிரசுக்கு மீண்டும் எந்த அடையாளத்தையும் ஏற்படுத்த விடாமல் தடுத்துள்ளது. காங்கிரஸ் தங்களால் ஒரு இடத்தை கூட வெல்ல முடியாமல் போனாலும், பா.ஜ.க எதிர்ப்பு வாக்குகளைப் பிரித்து, ஆம் ஆத்மியின் வாக்கு பலத்தைக் குறைத்தது. இதுவே ஆண்ட கட்சி தோல்வியைத் தழுவ முக்கியக் காரணமாயிற்று.

முன்னாள் முதலமைச்சரின் மகனும், காங்கிரஸ் கட்சியின் முக்கிய முகமாகத் திகழ்ந்த சந்தீப் திக்ஷித், ஆம் ஆத்மி கட்சியின் தலைவர் அரவிந்த் கெஜ்ரிவாலின் தோல்விக்கு காரணமாக அமைந்தார். கெஜ்ரிவாலின் இரு பலம் பொருந்திய கைகளாகக் கருதப்படும் மனீஷ் சிசோடியா, சத்யேந்தர் ஜெயின் ஆகியோர் காங்கிரஸ், ஆம் ஆத்மி இடையிலான பிரிவினை அரசியலின் காரணமாக தோல்வியைத் தழுவினர். மேலும், தேர்தல் பரப்புரையின் இறுதியில் காங்கிரஸ் தலைமை வெளியிட்ட அறிக்கைகள், சில தொகுதிகளில் சிறிய வாக்கு வித்தியாசத்தில் பா.ஜ.க வெல்ல வழிவகுத்தன.

ஒருவரின் வெற்றியை மற்றொருவர் பறித்தாலும், டெல்லி தேர்தல் பாஜக-வுக்கு சாதகமாக அமைந்ததற்கு வேறு சில காரணங்களும் உண்டு. தாங்கள் ஆட்சிக்கு வந்தால் அபரிமிதமான வளர்ச்சியை டெல்லியில் பார்க்கலாம் என்ற பாஜகவின் அறைக்கூவல் மக்கள் காதுகளில் வலுவாக ஒலித்திருக்கிறது.

மேலும், அரவிந்த் கெஜ்ரிவால் மீதான நேர்மறையான தேர்தல் பரப்புரை வியூகங்களும் பா.ஜ.க வெற்றிக்கு வழி வகுத்திருக்கிறது. பல தொகுதிகளின் வாக்காளர்கள், காங்கிரஸ், ஆம் ஆத்மி இடையே தாங்கள் யாரை ஆதரிப்பது என்பது குறித்து குழப்பத்தில் இருந்தனர். இந்த குழப்பமான மனநிலையை பா.ஜ.க பயன்படுத்திக் கொண்டு, தாங்கள் தான் ஒரே தேர்வு என்ற சூழலை உருவாக்கியது.

மேம்பாட்டை அடிப்படையாகக் கொண்ட முழக்கங்கள், அதிரடி சலுகைகள் நிறைந்த தேர்தல் அறிக்கைகள் என கவர்ச்சி காட்டிய கட்சியின் கொள்கைகளுக்கு எதிரான இசுலாமியர்களும், தங்களுக்கு விருப்பமானத் தொகுதிகளை தவிர, மற்றவைகளில் பா.ஜ.க-வுக்கு வாக்கு செலுத்த தயங்கவில்லை என்பதையே தேர்தல் முடிவுகள் காட்டுகிறது.

Delhi Assembly Elections 2020 vs 2025 results (ECI data)

பா.ஜ.க-வை வெற்றியாளராக மாற்றியதற்கான சிறந்த உதாரணமாக முஸ்தஃபாபாத் தொகுதி முடிவுகள் உள்ளது. இந்த தொகுதியில் 50 முதல் 55 விழுக்காடு வரை இசுலாமிய மக்கள் உள்ளனர். இங்கு அசாதுதீன் ஓவைசியின் AIMIM (ALL INDIA MAJLIS-E-ITTEHADUL. MUSLIMEEN) கட்சி வேட்பாளர் மொஹத் தாஹிர் ஹுசைன், ஆம் ஆத்மி கட்சி வேட்பாளர் அதீல் அகமது கானுக்கு பெரிய இடையூறாகக் களம் கண்டார். தாஹிர் 33,474 வாக்குகளைப் பெற்றார்; அதீல் அகமது 67,638 வாக்குகளைப் பெற்றிருந்தார். இப்படி இசுலாமிய மக்களின் வாக்குகள் பிரியவே, மீதமுள்ள வாக்குகளை கவர்ந்த பாஜக வேட்பாளர் மோகன் சிங் பிஷ்ட் 17,578 வாக்குகள் வித்தியாசத்தில் தொகுதியைக் கைப்பற்றினார்.

டெல்லி சட்டப்பேரவையின் பல தொகுதிகளில் பாஜக, ஆம் ஆத்மி கட்சிகளின் இடையேயான வாக்குகள் வித்தியாசம் சொற்பமாகவே இருந்தன. இதன் அடிப்படையில் பெரும்பாலான இடங்களில் ஆம் ஆத்மி வெற்றியை காங்கிரஸ் பறித்திருந்தது. இவை அனைத்தும் பா.ஜ.க-விற்கு சாதகமான சூழலை ஏற்படுத்தியது.

திமார்பூர் தொகுதியில், பா.ஜ.க 1,657 வாக்குகள் வித்தியாசத்தில் வென்றது. இதேநேரத்தில் காங்கிரஸ் வேட்பாளர் 6,101 வாக்குகளைப் பெற்றிருந்தார் என்பதே ஆம் ஆத்மியின் வெற்றியைப் பறித்ததற்கு சிறந்த உதாரணம்.

இதேபோல மெஹ்ரௌலி தொகுதியில், பாஜக வேட்பாளர் கஜேந்தர் சிங் யாதவ் 35,893 வாக்குகளைப் பெற்று, 35,467 வாக்குகள் பெற்றிருந்த ஆம் ஆத்மி கட்சி வேட்பாளர் மகேந்தர் சௌதரியை 426 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்தார். இதே தொகுதியில், காங்கிரஸ் வேட்பாளர் புஷ்பா சிங் 6,762 வாக்குகளை பெற்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. மற்றொரு தொகுதியான சங்கம் விஹாரில், காங்கிரஸ், ஆம் ஆத்மி, பா.ஜ.க ஆகியவை நல்ல எண்ணிக்கையிலான வாக்குகளைப் பெற்றன. ஆனால் பாஜக வேட்பாளர் சந்தன் குமார் சௌதரியிடம் 344 வாக்குகள் வித்தியாசத்தில் தொகுதியை பறிகொடுத்தது ஆம் ஆத்மி கட்சி.

திரிலோக்புரி தொகுதியில், பாஜக வேட்பாளர் ரவி காந்த் 392 வாக்குகள் வித்தியாசத்தில் வென்றார். இந்த தொகுதியில் ஆம் ஆத்மி கட்சி வேட்பாளர் 57,825 வாக்குகளையும், காங்கிரஸ் வேட்பாளர் 6,147 வாக்குகளையும் பெற்றிருந்தனர். சங்கம் விஹாரில், பாஜக 344 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றியை ருசித்தது.

இந்த குழப்பமான சூழல்களுக்கு இடையிலும் சீலம்பூர் என்ற தொகுதியில் மட்டும் வாக்காளர்கள் பெரிய மன மாற்றம் காட்டவில்லை. இங்கு சுமார் 50 விழுக்காடு இசுலாமிய மக்கள் வசித்து வருகின்றனர். தொகுதியில் போட்டியிட்ட 13 வேட்பாளர்களில் 10 பேர் இசுலாமியர்களாக இருந்தாலும், பெரிதாக வாக்குகளை பிரிக்க முடியவில்லை என்பதால், இத்தொகுதியை ஆம் ஆத்மி கட்சி கைப்பற்றியது.

கடந்த மூன்று தேர்தல்களில் ஆம் ஆத்மி கட்சியின் தேர்தல் அறிக்கைகள், கட்சிக்கு நல்வாய்ப்புகளை வழங்கியிருந்தாலும், இம்முறை பாஜக-வின் தேர்தல் அறிக்கை வாக்காளர்களை வெகுவாகக் கவர்ந்துள்ளது. மேலும், அரவிந்த் கெஜ்ரிவால் மீதான வெறுப்பு பரப்புரையும் பாஜக-விற்கு வலுவான அடித்தளத்தை அமைத்துக் கொடுத்திருக்கிறது.

டெல்லி பள்ளி மாணவர்களுடன் மோடி மேற்கொண்ட நேரடி உரையாடல், ஹரியானா முதலமைச்சர் யமுனா நதி நீரை சுவைத்தது, அதே நதியில் கெஜ்ரிவால் நீராட வேண்டும் என உத்தரப் பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் வலியுறுத்தியது பா.ஜ.க-வின் தேர்தல் வியூகங்களில் ஒன்றாகப் பார்க்கப்படுகிறது.

டெல்லி தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட நான்கு நாள்களில், நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்த 2025 - 26 நிதியாண்டுக்கான நிதிநிலை அறிக்கையில், ரூ.12.75 லட்சம் வரை ஆண்டு ஊதியம் பெறுபவர்களுக்கு வரி இல்லை என்ற பெரிய அறிவிப்பை வெளியிட்டார். இதுவும் டெல்லி தேர்தல் வாக்காளர்கள் மனதை சஞ்சலப்படுத்தியிருக்கலாம்.

தேர்தல் பரப்புரைகளில் கெஜ்ரிவாலும் அவரது கட்சியினர் சொல்வதைக் கேட்பதும், அவற்றைக் கிழித்து எறிய எதிர் கதைகளைத் தயாரிப்பதும் தான் பாஜக-வின் பெரிய தேர்தல் தந்திரமாக இருந்தது. மேலும், பாஜக எழுப்பிய விகாஸ்புரி குப்பை விவகாரமும் அவர்களுக்கு நன்றாகவே வேலை செய்தது. தேர்தல் பரப்புரைகளில் களம்கண்ட பாஜக-வின் 40 நட்சத்திர பேச்சாளர்களும் ஆம் ஆத்மி கட்சியை சுற்றி வளைத்து, அவர்களை மோசமாக தோற்கடித்தனர். விளைவாக, 27 ஆண்டுகளுக்குப் பிறகு தேசிய தலைநகர் டெல்லியில் அறுதிப் பெரும்பான்மையுடன் பா.ஜ.க ஆட்சி அமைக்கின்றனர்.

இதையும் படிங்க:மத்திய பட்ஜெட் 2025: பாதுகாப்புக்கான நிதி ஒதுக்கீடும், துறை மேம்பாட்டுக்கான வாய்ப்புகளும்!

தேர்தல் பரப்புரைகள் முடிவுற்று தேர்தல் நாள் நெருங்கியது. கட்சிகள் யாவும் நடத்தை விதிகளின்படி அமைதியாக இருப்பது தான் வழக்கம். ஆனால், பாஜக-வுக்கு மட்டும் ஒரு முகம் கிடைத்தது. பிரதமர் மோடி வாக்களிக்கும் நாள் அன்று மகா கும்பமேளாவில் கலந்துகொண்டு புனித நீராடினார். அன்றைய தினம் செய்தித் தொலைக்காட்சிகளில் அவரது முகம் மட்டுமே பிரகாசமாகத் தோன்றின. இதுவும், டெல்லி வாக்காளர்கள் மனதில் ஒரு சமிக்ஞையாக ஒலித்தது எனறே கூறலாம்.

இந்த தேர்தலில் பா.ஜ.க, கெஜ்ரிவாலின் பின்பத்தை உடைக்க சீரிய பணிகளை மேற்கொண்டது. தங்களின் நட்சத்திர பரப்புரைகளின் வாயிலாக அவர் ஒரு குழப்பவாதி, விவாதத்திற்கு மட்டும் ஏற்றவர், வலிமையற்றவர் போன்ற சொற்களின் மீது கெஜ்ரிவாலை அமர்த்தியது. இதனால், காங்கிரஸ், ஆம் ஆத்மி கட்சிகள் இரண்டுக்கும் இடையே யோசித்திருந்த மக்கள், கெஜ்ரிவாலைக் கடக்க முடியாமல் பாதி வழியிலேயே இறக்கிவிட்டுச் சென்றுள்ளனர்.

இப்போது கேள்வி என்னவென்றால், சட்டப்பேரவையில் கெஜ்ரிவால் இல்லாத எதிர்கட்சியாக இவர்களால் தாக்குப்பிடிக்க முடியாமா என்பது தான். அதுமட்டுமின்றி, ஆளும் பா.ஜ.க பேரவைக்குள் எடுத்துவைக்கும் விவாதங்களை, கெஜ்ரிவால் இல்லாத ஆம் ஆத்மி கட்சி எப்படி எதிர்கொள்ளப் போகிறது என்பது தான் வேடிக்கையாக இருக்கப் போகிறது.

டெல்லி தேர்தல் பரப்புரைத் தொடங்கி தேர்தலுக்குப் பிந்தையக் கருத்துக்கணிப்புகள் வரை தலைநகர் தங்களுக்குத் தான் என்ற மமதையில் ஆம் ஆத்மி கட்சி இருந்துவிட்டது. இனி கட்சியை எப்படி கட்டமைக்கப்போகிறது என்றும், பெரும் சக்திகளுக்கு எதிராக தங்களை தக்கவைக்க ஆம் ஆத்மி என்ன வியூகம் வகுக்கிறது என்பதும் தான் டெல்லி அரசியலின் சுவாரஸ்யம்.

ABOUT THE AUTHOR

...view details