டாக்கா:வங்கதேசத்தில் பாகிஸ்தானுடனான போரில் உயிர் நீத்த தியாகிகளின் வாரிசுகளுக்கு அரசு பணியில் 30 சதவீத இடஒதுக்கீடு நடைமுறையில் இருந்து வருகிறது. இதற்கு எதிராக நாட்டில் உள்ள மாணவ அமைப்பினர் பல ஆண்டுகளாக போராடி வருகின்றனர். 'பாகுபாடு எதிர்ப்பு மாணவர் இயக்கம்' என உருவாகி ஆளுங்கட்சிக்கு எதிராக தீவிர போராட்டங்கள் நடத்தப்பட்டன.
கடந்த மாதம் நாடு முழுவதும் மீண்டும் மாணவர்கள் போராட்டத்தில் குதித்தனர். அதில், தலைநகர் டாக்காவில் நடத்தப்பட்ட போராட்டத்தின்போது 200க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர். இந்நிலையில், நேற்று (ஆகஸ்ட் 4) பலியானவர்களுக்கு நீதி கேட்டும், அந்நாட்டு பிரதமர் ஷேக் ஹசீனாவை பதவி விலக வலியுறுத்தியும் தலைநகர் டாக்காவில் ஆயிரக்கணக்கானோர் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது இரு தரப்புக்குள்ளும் ஏற்பட்ட வன்முறையில் 91 பேர் கொல்லப்பட்டதாக தகவல் வெளியானது.
நேற்றைய தினம் தொடங்கிய போராட்டம் இன்று பிரதமர் அலுவகம் வரை தொடர்ந்தது. இதற்கு மத்தியில் இன்று வங்கதேசத்தின் பிரதமர் ஷேக் ஹசீனா தன்னுடைய பிரதமர் பதவியை ராஜிநாமா செய்து விட்டதாக தகவல் வெளிவந்துள்ளது. மேலும், அவர் ராணுவ ஹெலிகாப்டரில் நாட்டை விட்டு வெளியேறி விட்டதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. வங்கதேசத்தில் இருந்தில் புறப்பட்ட அந்த ஹெலிகாப்டர் டெல்லியை நோக்கி வருவதாக ஏஎன்ஐ செய்தி நிறுவனம் தெரிவித்தது.
இந்நிலையில், பிரதமர் ஷேக் ஹசீனா நாட்டை விட்டு தப்பியோடிய செய்தியை அறிந்த போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் டாக்காவில் உள்ள இந்திராகாந்தி கலாச்சார மையம் ( Indira Gandhi Cultural Centre (IGCC))மற்றும் பங்கபந்து நினைவு அருங்காட்சியகம்( Bangabandhu Memorial Museum) சேதப்படுத்தியுள்ளனர்.