தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / international

காலிஸ்தான் தலைவர் கொல்லப்பட்ட விவகாரம்...இந்தியாவை ரஷ்யாவுடன் ஒப்பிட்டு கனடா அமைச்சர் சொன்னது என்ன?

கனடாவில் உள்ள இந்திய தூதரகங்களில் இருக்கும் அதிகாரிகள் நோட்டீஸ் காலகட்டத்தில் இருப்பதாக கனடா வெளியுறவுத்துறை அமைச்சர் மெலனி ஜோலிதெரிவித்துள்ளார்.

By ETV Bharat Tamil Nadu Team

Published : 3 hours ago

இந்தியா, கனடா நாடுகளின் கொடிகள்
இந்தியா, கனடா நாடுகளின் கொடிகள் (Image credits-Etv Bharat)

டொராண்டோ:காலிஸ்தான் ஆதரவு தலைவர்களில் ஒருவரான நிஜ்ஜார் கொலை வழக்கில் தொடர்பிருப்பதாக கூறி இந்திய தூதரக அதிகாரிகளை கனடா நீக்கிய நிலையில், கனடாவில் உள்ள இந்திய தூதரக அதிகாரிகள் இப்போது நோட்டீஸ் காலகட்டத்தில் உள்ளதாக கனடாவின் வெளியுறவுத்துறை அமைச்சர் மெலனி ஜோலி கூறியுள்ளார்.

காலிஸ்தான் தலைவர் ஹர்தீப் சிங் நிஜ்ஜார் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் பிரிட்டிஷ் கொலம்பியாவில் படுகொலை செய்யப்பட்டார். இதற்கு இந்திய ஏஜென்ட்களின் தொடர்பே காரணம் என்று கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ குற்றம் சாட்டினார். இதனால் இருநாடுகளுக்கு இடையேயான உறவில் சிக்கல் எழுந்துள்ளது.

கனடாவின் குற்றச்சாட்டு அரசியல் ரீதியாக உள்நோக்கம் கொண்டது என்று இந்தியா கூறி வருகிறது. கனடாவில் உள்ள இந்தியாவுக்கு எதிராக செயல்படும் காலிஸ்தான் அமைப்பினர் மீது கனடா மென்மையான போக்கை கடைபிடிப்பதாக இந்தியா குற்றம் சாட்டி உள்ளது.

இதையும் படிங்க:"இந்தியா-கனடா உறவு பாதிக்கப்பட்டதற்கு ட்ரூடோ மட்டுமே பொறுப்பு"- இந்தியா அதிரடி குற்றச்சாட்டு

இருநாடுகளும் பரஸ்பரம் குற்றம் சாட்டி வந்த நிலையில் கனடாவில் உள்ள இந்திய தூதர்களை அந்நாட்டு அரசு நீக்கியது. இதற்கு பதிலடியாக இந்தியாவில் உள்ள கனடா தூதரக அதிகாரிகளை இந்தியா நீக்கியது. இந்த நிலையில் மாண்ட்ரீல் நகரில் செய்தியாளர்களிடம் பேசிய கனடா வெளியுறவுத்துறை அமைச்சர் மெலனி ஜோலி, "கொலை மிரட்டல் விடுத்ததில் இந்திய தூதரக அதிகாரிகளுக்கு தொடர்பு இருப்பதாக கனடா போலீசார் கண்டறிந்துள்ளனர். வியன்னா மாநாட்டின் ஒப்பந்தத்தை மீறும் வகையில் கனடாவின் குடியுரிமை பெற்றவர்கள் உயிருக்கு அபாயம் இருப்பதை நாங்கள் ஒருபோதும் பொறுத்துக்கொள்ள மாட்டோம்.

கனடா வரலாற்றில் ஒருபோதும் இதுபோன்ற செயலை கண்டதில்லை. இந்த அளவிலான நாடு கடந்த அடக்குமுறை கனடா மண்ணில் நடைபெற முடியாது. இது போன்ற செயல்கள் ஐரோப்பாவில் நடக்கின்றன. குறிப்பாக ரஷ்ய நாடானது ஜெர்மனி, இங்கிலாந்தில் இது போல செயல்படுகிறது. இந்த விஷயத்தில் நாங்கள் உறுதியாக இருக்கின்றோம்.

கனடாவில் இருந்து ஒட்டாவா இந்திய தூதர் உட்பட தூதரக அதிகாரிகள் நீக்கப்பட்டு விட்டனர். அவர்கள் இப்போது நோட்டீஸ் காலகட்டத்தில் இருக்கின்றனர். குறிப்பாக டொராண்டோ, வான்கூவர் ஆகிய பகுதிகளில் உள்ள இந்திய தூதரக அதிகாரிகள் நோட்டீஸ் காலகட்டத்தில் உள்ளனர்,"என்றார்.

ஈடிவி பாரத் வாட்ஸ்அப் சேனலில் இணையஇங்கே கிளிக் செய்யவும்

ABOUT THE AUTHOR

...view details