தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / international

காந்தியின் வார்த்தைகளை மேற்கோள் காட்டி இஸ்ரேலுக்கு லெபனான் தூதர் சொன்னது என்ன? - LEBANON ENVOY TO INDIA

புரட்சியாளரை கொன்று விடலாம் புரட்சியை அழிக்க முடியாது என்ற மகாத்மா காந்தியின் வார்த்தைகளை மேற்கோள்காட்டி இந்தியாவுக்கான லெபனான் தூதர் இஸ்ரேலுக்கு அறிவுறுத்தியுள்ளார்.

இந்தியாவுக்கான லெபனான் தூதர் ராபி நர்ஷ்
இந்தியாவுக்கான லெபனான் தூதர் ராபி நர்ஷ் (image credits-IANS)

By ETV Bharat Tamil Nadu Team

Published : Oct 9, 2024, 10:03 AM IST

புதுடெல்லி: ஹிஸ்புல்லா அமைப்பின் தலைவர் ஹசன் நஸ்ருல்லாவுக்கு அடுத்த நிலையில் இருந்த தலைவரையும் கொன்று விட்டதாக இஸ்ரேல் அறிவித்த நிலையில் இந்தியாவுக்கான லெபனான் தூதர் ராபி நர்ஷ், மகாத்மா காந்தியின் வரிகளை மேற்கோள் காட்டி இஸ்ரேலுக்கு அறிவுறுத்தியுள்ளார்.

இது குறித்து பிடிஐ செய்தி நிறுவனத்துக்கு ராபி நர்ஷ் அளித்துள்ள நேர்காணலில்," மகாத்மா காந்தியின் வார்த்தைகளை நினைவு படுத்த விரும்புகின்றேன். நீங்கள் ஒரு புரட்சியாளரை கொன்று விடலாம்.ஆனால், நீங்கள் புரட்சியை அழிக்க முடியாது. நீங்கள் ஹிஸ்புல்லா தலைவர்களை கொல்லலாம்.ஆனால், ஹிஸ்புல்லா அமைப்பை ஒழிக்க முடியாது. களத்தில் பணியாற்றும் மக்களை கொண்டது இந்த இயக்கம்.பாரசூட் மூலமாக லெபனானுக்குள் வருகின்றனர் என்பது போல இது கற்பனைவாத கட்டமைப்பு அல்ல.

சர்வதேச சட்டங்களுக்கு எதிராக செயல்படும் இஸ்ரேலுக்கு எதிராக செயல்படும் இயக்கம் ஹிஸ்புல்லா. அதன் தலைவர்களை அழிப்பதால் மட்டும் அந்த இயக்கத்தை அழித்து விட முடியாது, லெபானான் நாட்டில் ஹிஸ்புல்லா அரசியல் இயக்கமாக செயல்படுகிறது. நாடாளுமன்றத்திலும் அமைச்சரவையிலும் பிரதிநித்துவம் கொண்ட அரசியல் கட்சி. ஹிஸ்புல்லாவுக்கு ஆயுதப்படை உள்ளது.

இதையும் படிங்க:நெதன்யாகு குறித்த கேள்வியை தவிர்த்த கமலா ஹாரிஸ் என்ன சொன்னார் தெரியுமா?

இஸ்ரேல் தொடுத்திருக்கும் போர் காரணமாக 2,100 பேர் இறந்துள்ளனர். 11,000 பேர் காயம் அடைந்துள்ளனர். 2.2 மில்லியன் மக்கள் இடம் பெயர்ந்துள்ளனர்.லெபனானில் மனித நேயத்துக்கான அச்சுறுத்தலை இஸ்ரேல் உருவாக்கி உள்ளது.இந்தியா உட்பட உலக நாடுகளிடம் போரை நிறுத்த உதவுமாறு கேட்டுக் கொண்டுள்ளோம்.இந்தியாவில் இருந்து லெபனானுக்கு மருத்து பொருட்களை கொண்டு செல்வதற்கான பணிகளில் ஈடுபட்டுள்ளோம்,"என்று கூறியுள்ளார்.

இதனிடையே கடந்த செவ்வாய்கிழமையன்று ஊடகங்களிடம் பேசிய இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு, "அண்மையில் கொல்லப்பட்ட ஹிஸ்புல்லா தலைவர் ஹசன் நஸ்ருல்லாவுக்கு அடுத்த நிலையில் இருந்த தலைவர்களையும் இஸ்ரேல் ராணுவம் அழித்து விட்டது,"என்று கூறியிருந்தார்.

ABOUT THE AUTHOR

...view details