சென்னை:புற்றுநோய் ஆராய்ச்சிக்காக நாட்டின் முதல் புற்றுநோய் மரபணு தரவுத் தளத்தை (Cancer Genome Database) சென்னை ஐஐடி இயக்குநர் காமகோடி திங்கட்கிழமை (பிப்.3) தொடங்கி வைத்தார்.
உலகளவில் மிக ஆபத்தான உடல்நலப் பிரச்சனைகளில் ஒன்று புற்றுநோய். இந்த கொடிய நோயுடன் வாழும் மக்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதாக இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கவுன்சில் (Indian Medical Research Council) சமீபத்தில் வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்தியாவில் ஒன்பது பேரில் ஒருவருக்கு அவர்களின் வாழ்நாளில் புற்றுநோய் வரவாய்ப்புள்ளதாகவும், தற்போதைய நிலவரப்படி 14,61,427 பேர் புற்றுநோயுடன் வாழ்ந்து வருவதாகவும் தேசிய புற்றுநோய் மையம் தெரிவித்துள்ளது.
இந்தியாவிலும், வெளிநாடுகளிலும் உள்ள ஆராய்ச்சியாளர்கள், மருத்துவர்கள் எளிதில் அணுகக்கூடிய வகையில், bcga.iitm.ac.in என்ற தரவுத் தளத்தை ஐஐடி கல்வி நிறுவனம் ஏற்படுத்தியுள்ளது. உலக புற்றுநோய் தினம் செவ்வாய்கிழமை (பிப்.04) கடைபிடிக்கப்படுவதையொட்டி இந்த சென்னை ஐஐடியின் இந்த ஏற்பாடு முக்கியத்துவத்தையும் கவனத்தையும் பெற்றுள்ளது.
2022 முதல் ஒவ்வொரு ஆண்டும் புற்றுநோய் பாதிப்பு 12.8 சதவீதமாக அதிகரித்து வருகிறது. இந்தியாவில் புற்றுநோய் பாதிப்பு அதிகளவில் உள்ள போதும், உலகளாவிய மரபணு ஆய்வுகளோடு ஒப்பிடுகையில் இந்தியாவில் குறைவாக இருப்பதாகவே மதிப்பிடப்படுகிறது. இந்தியாவில் பரவலாக உள்ள புற்றுநோய்களுக்கென மரபணுக் கட்டமைப்பு இல்லாத காரணத்தால், இந்தியாவில் புற்றுநோயின் மரபணு மாற்றங்களை கண்டறியக் கூடிய நோய் கண்டறியும் சாதனங்களோ, மருத்து வகைகளோ பட்டியலிடப்படவில்லை.
5 ஆண்டுகால ஆய்வு!:இந்தியாவில் பல்வேறு புற்றுநோய்களுக்கு மரபணுரீதியாக இருந்துவரும் இடைவெளியை நிரப்பும் வகையில், புற்றுநோய் மரபணுத் திட்டத்தை கடந்த 2020-ம் ஆண்டில் சென்னை ஐஐடி தொடங்கியது. இத்திட்டத்தின்கீழ் நாடு முழுவதும் 500 மார்பகப் புற்றுநோய் நோயாளிகளின் திசு மாதிரிகளில் இருந்து 960 முழு எக்சோம் வரிசைமுறை சேகரிக்கும் பணி நிறைவுபெற்றுள்ளது.
இந்திய மார்பகப் புற்றுநோய் மரபணு வரிசை உருவாக்கம் பணிகள் குறித்து சென்னை ஐஐடி இயக்குநர் காமகோடி, பாரத் புற்றுநோய் மரபணு வரைபடத்தை (Bharat Cancer Genome Atlas – BCGA) இன்று வெளியிட்டார்.