டெல்லி: ஏடிஸ் கொசுக்களால் பரவும் டெங்கு, சிக்குன்குனியா உள்ளிட்ட நோய் பாதிப்புகளை ஜிகா என்றழைக்கப்படுகிறது. இந்த நோயால் உயிரிழப்புகள் ஏற்படுவதில்லை என்றாலும், இதனால் பாதிக்கப்பட்ட கர்ப்பிணிகளுக்கு பிறக்கும் குழந்தைகள் மைக்ரோசெபாலி (தலையின் அளவு குறைவாக காணப்படுதல்) பாதிப்பு ஏற்படுவது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், சுகாதாரத்துறை இணை அமைச்சர் அனுப்ரியா படேல் இது குறித்து நாடாளுமன்றத்தில் பேசும் போது, இந்தியா முழுவதும் சுகாதார பாதுகாப்பு வழங்குவதன் பொறுப்பு மாநில அரசுகளிடமே இருப்பதாக பேசினார். மேலும், நோய் பாதிப்புகளை கட்டுப்படுத்த அனைத்து உதவிகளையும் மத்திய அமைச்சம் வழங்கி வருதாக தெரிவித்தார்.
தொடர்ந்து பேசிய அவர், "ஜிகா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களுக்கென தேவைக்கேற்ப தனி படுக்கைகள் ஒதுக்கவும் நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது. மேலும், மத்திய அரசு சார்பில் ஜிகா வைரஸ் நோய் பரவலைக் கட்டுப்படுத்த பல்வேறு செயல் திட்டங்கள் கடைபிடிக்கப்பட்டு வருகின்றன" என பேசினார்.
இதனிடையே, மத்திய சுகாதாரத்துறை ஜிகா வைரஸ் குறித்து அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில், "கடந்த 2016ஆம் ஆண்டு குஜராத் மாநிலத்தில் ஜிகா வைரஸின் பாதிப்பு முதன்முதலின் பதிவானது. அதனை அடுத்து, தமிழ்நாடு, மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான், கேரளா, மகாராஷ்டிரா, உத்தரப் பிரதேசம், கர்நாடகா, டெல்லி உட்பட பல்வேறு பகுதிகளில் ஜிகா வைரஸினால் ஏற்படும் பாதிப்புகள் பதிவாகின.
அந்த வகையில், கடந்த 2017ஆம் ஆண்டு குஜராத்தில் மூவரும், தமிழகத்தில் ஒருவரும் என ஜிகா வைரஸின் பாதிப்புக்கு ஆளானார்கள். அதனைத் தொடர்ந்து, 2018-ல் மத்தியப் பிரதேசம் மாநிலத்தில் 260 பேரும், 2021ஆம் ஆண்டு உத்தரப் பிரதேசத்தில் 84 பேரும், கேரளாவில் 150 பேரும் ஜிகா வைரஸால் பாதிக்கப்பட்டனர்.