தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / entertainment

சூர்யா நிராகரித்தது உண்மையில் வருத்தமாக இருக்கிறது - ’துருவ நட்சத்திரம்’ குறித்து கௌதம் மேனன் வேதனை - GVM ABOUT SURIYA

GVM about Suriya: ’துருவ நட்சத்திரம்’ திரைப்படத்தை சூர்யா வேண்டாம் என சொன்னது, உண்மையிலேயே மிக வருத்தமாக இருந்தது என இயக்குநர் கௌதம் மேனன் தெரிவித்துள்ளார்.

சூர்யா, கௌதம் மேனன்
சூர்யா, கௌதம் மேனன் (Credits: Film Posters, ETV Bharat Tamil Nadu)

By ETV Bharat Entertainment Team

Published : Jan 20, 2025, 6:17 PM IST

சென்னை: சுந்தர் சி இயக்கத்தில் விஷால், சந்தானம் நடிப்பில் 2013-ஆம் ஆண்டு உருவான 'மதகஜராஜா' திரைப்படம், 12 ஆண்டுகள் கழித்து பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வெளிவந்து வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. இதைப் போலவே பல்வேறு வருடங்களாக கிடப்பில் போடப்பட்டிருக்கும் படங்கள் வெளியாக வாய்ப்புள்ளதா என ரசிகர்கள் மத்தியில் கேள்வி எழுந்துள்ளது.

இந்நிலையில் கௌதம் மேனன் இயக்கி மம்முட்டி நடித்துள்ள ‘டோமினிக் அண்ட் தி லேடீஸ் பர்ஸ்’ எனும் மலையாளத் திரைப்படம், ஜனவரி 23ஆம் தேதி வெளியாகிறது. இந்த படத்தின் புரோமோசனில் பல வருடங்களாக வெளியிடப்படாமல் இருக்கும் கௌதம் மேனனின் ‘துருவ நட்சத்திரம்’ குறித்து கேட்கப்பட்டது.

அப்போது துருவ நட்சத்திரம் திரைப்படத்தில் சூர்யா நடிக்காதது குறித்து பேசிய அவர், “நடிகர்கள் சில படங்களில் நடிக்க ஒத்துக்கொள்ளாமல் இருப்பதை என்னால் புரிந்துகொள்ள முடிகிறது. ஆனால் சில நேரங்களில் புரிந்துகொள்ளவும் நான் விரும்புவதில்லை. சூர்யா துருவ நட்சத்திரத்தில் நடிப்பதற்கு யோசித்திருக்கவே கூடாது என்றுதான் நான் நினைத்தேன்.

துருவ நட்சத்திரம்

ஏனென்றால், ‘காக்க காக்க’ மற்றும் ‘வாரணம் ஆயிரம்’ என இரண்டு திரைப்படமும் அப்படித்தான் முன் யோசனை எதுவுமில்லாமல் உருவாக்கப்பட்டது. ’வாரணம் ஆயிரம்’ படத்தின் அப்பா கதாப்பாத்திரத்தில் நடிப்பதற்கு முதலில் நானா படேகர் மற்றும் மோகன்லால் ஆகியோரிடம்தான் போய் கதை சொன்னேன். எல்லோரும் அவர் அவர்களுக்கென்று ஒரு காரணத்தை சொன்னார்கள். இதன்பின் சூர்யா நானே அந்த கதாப்பாத்திரத்தில் நடிக்கிறேன் என்றார்.

அவருக்கு அந்த கதாபாத்திரத்தில் நடிக்க முடியும் என தைரியம் இருந்தது. அதை நம்பி அந்த படத்தை உருவாக்கினோம். ஆனால், ’துருவ நட்சத்திரம்’ திரைப்படத்தை அவர் தேர்வு செய்யவில்லை. துருவ நட்சத்திரத்தின் ஐடியாவை கேட்டார், கதை கேட்டார், படம் குறித்து நிறைய விவாதித்தோம். இந்த படம் எப்படியான படமாக இருக்கும் என கேட்டுக் கொண்டே இருந்தார். என்னிடம் அதற்கு பதில் இல்லை. ஆனால் அவர் இருந்தால் சிறப்பான படம் ஒன்றை செய்திருப்போம்.

ஒரு கட்டத்தில் அவர் அந்த கதையை தேர்வு செய்யவில்லை. இந்த இயக்குநர் தானே ’காக்க காக்க’, ’வாரணம் ஆயிரம்’ என இருபடங்களை எடுத்தார் என அவர் நம்பியிருக்கலாம் என்பதுதான் என் எண்ணம். நான் உதவியாகக்கூட கேட்கவில்லை. ஏற்கனவே 2 படங்களில் வேலை செய்துள்ளோம் என்ற நம்பிக்கையில் தான் கேட்டேன். அப்படியே அந்த படம் எடுக்கப்பட்டால் எவ்வளவு தூரம் தப்பாக, தோல்வியாக சென்றுவிடும் என்று கூட கேட்டேன்.

உங்களுக்கு அடுத்த படம் வராது என நினைக்கிறீர்களா? நான்தானே தயாரிக்கிறேன், எனக்கு தானே பிரச்னை என்று கூட கேட்டேன். ஆனால் அந்த படம் நடக்கவில்லை, வேறு யார் என்ன சொல்லி இருந்தாலும் கடந்து வந்திருப்பேன் என நினைக்கிறேன். ஆனால் சூர்யா வேண்டாம் என சொன்னதுதான் உண்மையிலேயே மிக வருத்தமாக இருந்தது,” எனத் தெரிவித்தார்.

இதையும் படிங்க:குடிப்பழக்கம் மிக கொடுமையானது... ’பாட்டல் ராதா’ பட நிகழ்வில் பா. ராஞ்சித் உருக்கமான பேச்சு

கெளதம் மேனன் - விக்ரம் கூட்டணியில் உருவான ‘துருவ நட்சத்திரம்’ படத்தின் டீசர், கடந்த 2017-ஆம் ஆண்டே வெளியாகி ரசிகர்களின் எதிர்பார்ப்புகளை எகிற வைத்தது. ஆனால், சில காரணங்களால் படத்தின் படப்பிடிப்பு பாதியிலேயே நின்றது. அதன்பிறகு, மீண்டும் சில காலம் படப்பிடிப்பு தொடங்கி நடந்துவந்த நிலையில், கடந்த 2018-ஆம் ஆண்டு மறுபடியும் டீசர் வெளியானது. பல முறை வெளியாகும் என அறிவிக்கப்பட்டு வெளியிடப்படாமலேயே இருக்கிறது.

தற்போது அதனை குறித்து பேசிய கௌதம் மேனன், “துருவ நட்சத்திரம் கண்டிப்பாக ரிலீஸாகும். துருவ நட்சத்திரத்தை நான் இன்னும் பிடித்து வைத்திருக்க காரணம் என்னவென்றால் இப்போதும் அந்த படம் சமீபத்தில் எடுத்து முடிக்கப்பட்ட புதிய படம்போல்தான் இருக்கிறது.

2018 ஆம் ஆண்டில் எடுத்து முடிக்கப்பட்ட படம் போல் ’துருவநட்சத்திரம்’ இல்லை. ’மதகஜராஜா’ அவ்வளவு நன்றாக திரையரங்குகளில் ஓடுகிறது என சொல்கிறார்கள். அதனால் இன்னும் மகிழ்ச்சி அடைகிறேன். அது இன்னும் உத்வேகமாக உள்ளது,” எனவும் தெரிவித்தார்.

ABOUT THE AUTHOR

...view details