தமிழ்நாடு

tamil nadu

By ETV Bharat Tamil Nadu Team

Published : Feb 18, 2024, 11:29 AM IST

Updated : Feb 18, 2024, 1:36 PM IST

ETV Bharat / entertainment

இசைக் கலைஞர்கள் சங்கத் தேர்தல்; 1.30 மணி நிலவரப்படி 398 ஓட்டுகள் பதிவு!

Film music artists association election: இசையமைப்பாளர் சங்கத்தின் 2023 - 2024ஆம் ஆண்டிற்கான புதிய நிர்வாகிகளை தேர்ந்தெடுக்கும் இசைக் கலைஞர்கள் சங்கத் தேர்தல் இன்று நடைபெறுகிறது.

இசைக் கலைஞர்கள் சங்கத் தேர்தல்
இசைக் கலைஞர்கள் சங்கத் தேர்தல்

சென்னை: இசைக் கலைஞர்கள் சங்கத் தேர்தலுக்கு விதிக்கப்பட்டிருந்த தடையை உயர் நீதிமன்றம் நீக்கியதை தொடர்ந்து, வடபழனியில் உள்ள திரைப்பட இசைக் கலைஞர்கள் சங்க அலுவலகத்தில், திரைப்பட இசைக் கலைஞர்கள் சங்கத் தேர்தல் இன்று (பிப்.18) நடைபெறுகிறது.

திரைப்பட இசைக் கலைஞர்கள் சங்கத்தின் தேர்தல், கடந்த 2023ஆம் ஆண்டு செப்டம்பர் 24ஆம் தேதி நடைபெற இருந்தது. இந்த தேர்தலில், இதுவரை வாக்குரிமை இல்லாத அசோஸியேட் உறுப்பினர்களுக்கு வாக்களிக்கும் உரிமை வழங்கப்பட்டிருந்த நிலையில், இதற்கு எதிர்ப்பு தெரிவித்து நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

இந்த வழக்கில், திரைப்பட இசைக் கலைஞர்கள் சங்கத்தின் தேர்தலுக்கு, நீதிமன்றம் இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டது. இதனையடுத்து, தேர்தலுக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கை சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்து, தேர்தலுக்கு விதிக்கப்பட்ட இடைக்காலத் தடையையும் ரத்து செய்து உத்தரவிட்டது.

அதன்படி, இசையமைப்பாளர் சங்கத்தின் 2023 - 2024ஆம் ஆண்டிற்கான, புதிய நிர்வாகிகளை தேர்ந்தெடுக்கும் இசைக் கலைஞர்கள் சங்கத் தேர்தல், ஓய்வு பெற்ற மாவட்ட நீதிபதி பாலசுப்பிரமணியம் தலைமையில் இன்று நடைபெறுகிறது. காலை 8 மணிக்கு துவங்கிய தேர்தல் மாலை 5 மணி வரை நடக்க உள்ளது. இதில் ஆயிரத்து 25 பேர் வாக்களிக்கத் தகுதியானவர்களாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.

இசைக் கலைஞர்கள் சங்கத் தேர்தலில், தலைவர் பதவிக்கு இசையமைப்பாளர் தீனா (மூன்றாவது முறை) மற்றும் இசையமைப்பாளர் சபேஷ் ஆகியோர் போட்டியிடுகின்றனர். இசைக் கலைஞர்களுக்கான சங்கத் தேர்தலில் முன்னணி இசையமைப்பாளர்களான இளையராஜா, கங்கை அமரன், ஹாரிஸ் ஜெயராஜ், ஏ.ஆர்.ரஹ்மான், தேவா, ஸ்ரீ காந்த் தேவா, ஜி.வி பிரகாஷ், அனிருத், விஜய் ஆண்டனி உள்ளிட்ட பலரும் வாக்களிக்க உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில், இன்று காலையில் தொடங்கிய வாக்குப்பதிவின்போது வந்த பாடகி சின்மயி, தனக்கான உறுப்பினர் அடையாள அட்டையை கொண்டு வராததால் நிறுத்தி வைக்கப்பட்டார். பின்னர், அதனை தனது மொபைல் போன் மூலம் காண்பித்த பிறகு, அவர் வாக்களிக்க அனுமதிக்கப்பட்டார்.

இதனிடையே, பிற்பகல் 1.30 மணி நிலவரப்படி 398 வாக்குகள் பதிவாகி உள்ளது. மேலும், முன்னணி இசை அமைப்பாளர்கள் யாரும் இதுவரை வரவில்லை. அதேநேரம், இசைக் கலைஞர்கள் மட்டுமே வாக்களித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க:விருதுநகர் பட்டாசு ஆலை விபத்தில் 10 பேர் பலி: பிரதமர் மோடி, முதலமைச்சர் ஸ்டாலின் இரங்கல்!

Last Updated : Feb 18, 2024, 1:36 PM IST

ABOUT THE AUTHOR

...view details