சென்னை: இயக்குநர் கஸ்தூரி ராஜாவின் மகனும் இயக்குநர் செல்வராகவனின் தம்பியுமான நடிகர் தனுஷ், நடிகர் ரஜினிகாந்தின் மகளும், இயக்குநருமான ஐஸ்வர்யா ரஜினிகாந்தை காதலித்து வந்தார். இருவீட்டார் சம்மதத்துடன், தனுஷ், ஐஸ்வர்யா திருமணம் கடந்த 2004ஆம் ஆண்டு நவம்பர் 18ஆம் தேதி சென்னையில் நடைபெற்றது.
இவர்களுக்கு இரண்டு மகன்கள் உள்ளனர். சுமார் 20 ஆண்டுகள் திருமண வாழ்வுக்கு பின்னர், கருத்து வேறுபாடு ஏற்பட்டதால் கடந்த சில ஆண்டுகளாக இருவரும் தனித்தனியாக பிரிந்து வாழ்ந்து வருகின்றனர். கடந்த 2022ஆம் ஆண்டு இருவரும் சமூக வலைதளத்தில் தாங்கள் பிரிந்து விட்டதாக பதிவிட்டனர்.
தனுஷ் மற்றும் ஜஸ்வர்யா இடையே உள்ள பிரச்சனையை தீர்க்க அவர்களுடைய குடும்பத்தினர் மற்றும் நண்பர்கள் ஈடுபட்டனர். ஆனால் இருவரும் விவாகரத்து பெறுவதில் உறுதியாக இருந்ததாகக் கூறப்படுகிறது. இந்நிலையில் இருவரும் தங்களுடைய திருமண வாழ்க்கையை முடித்துக் கொள்ளும் வகையில் பரஸ்பரம் விவாகரத்து கோரி சென்னை குடும்ப நல நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளனர்.