புதுடெல்லி: மாநிலங்களின் கட்டமைப்பை மேம்படுத்த ரூ.1.5 லட்சம் கோடி வட்டியில்லாத கடனாக வழங்கப்படும் என்று மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்தார்.
மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் எட்டாவது முறையாக மத்திய நிதி நிலை அறிக்கையை மக்களவையில் இன்று தாக்கல் செய்தார். முன்னதாக அவர் நிதி அமைச்சகத்தில் இருந்து பட்ஜெட் உரை அடங்கிய கோப்பை எடுத்துச் சென்றார். மத்திய பட்ஜெட்டுக்கு பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்தது.
சிறு, குறு நிறுவனங்களுக்கு உதவி:இதனைத் தொடர்ந்து இன்று காலை 11 மணிக்கு மக்களவையில் மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் நிதி நிலை அறிக்கையை தாக்கல் செய்து பேசினார். அப்போது நிர்மலா சீதாராமன் பேசுகையில், குறு, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்கு கடன் உத்தரவாதமானது ரூ.5 கோடியில் இருந்து ரூ.10 கோடியாக அதிகரிக்கப்படும் என அறிவித்தார்.
இதன் மூலம் அடுத்த ஐந்து ஆண்டுகளில் கூடுதலாக ரூ.1.5 லட்சம் கோடி கடன்கள் வழங்கப்பட உள்ளன. அதே போல கிஷான் கடன் அட்டையின் பேரில் கடன் வரம்பு என்பது ரூ.3 லட்சத்தில் இருந்து ரூ.5 லட்சமாக உயர்த்தப்படுகிறது. குறு, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் மூலம் நாட்டின் 45 சதவிகித ஏற்றுமதி மேற்கொள்ளப்படுகிறது. ரூ.5 லட்சம் வரம்பு கொண்ட குறு நிறுவனங்களுக்கான கடன் அட்டைகள் வழங்கப்படும்.
ஸ்டார்ட் அப் நிறுவனங்கள்:ஸ்டார்ட் அப் நிறுவனங்களுக்கான நிதி ரூ.10,000 கோடியாக அரசின் சார்பில் வழங்கப்படும். முதன் முறையாக தொழில் முனைவோராக செயல்படும் 5 லட்சம் பெண்கள், எஸ்.சி, எஸ்.டி., சமூகத்தினருக்கு ரூ.2 கோடி கடன்கள் வழங்கப்படும். காலணி, தோல் துறையின் மேம்பாட்டுக்காக நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். இந்தியாவை உலகின் மொம்மைகள் உற்பத்தி நாடாக மாற்றுவதற்கும் நடவடிக்கை எடுக்கப்படும். தூய தொழில்நுட்ப உற்பத்தி செயல்பாடுகளுக்கான ஒரு இயக்கம் தொடங்கப்படும்.
தற்காலிக தொழிலாளர்களுக்கு அடையாள அட்டைகள் வழங்கப்படும், அவர்கள் பதிவு செய்வதற்கான E-SHRAM இணையதளம் தொடங்கப்படும். நகர்ப்புற ஊழியர்களுக்காக அவர்களின் சமூக பொருளாதாரத்தை உயர்த்தும் வகையில் திட்டம் செயல்படுத்தப்படும்.
கட்டமைப்பை மேம்படுத்த மாநிலங்களுக்கு உதவி:கட்டமைப்பை மேம்படுத்த வட்டி இல்லாத கடன் வழங்க ரூ.1.5 லட்சம் கோடி ஒதுக்கப்படுகிறது. இது 50 ஆண்டுகளுக்கு வட்டியில்லாத கடனாக வழங்கப்படும். கல்வியில் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை முன்னெடுக்க ரூ.500 கோடி நிதி ஒதுக்கப்படும். மாநிலங்களின் உதவியுடன் 50 சுற்றுலா இடங்கள் முன்னெடுக்கப்படும். ஹோம்ஸ்டே நிறுவனங்களுக்கு முத்ரா கடன்கள் வழங்கப்படும். அதே போல மருத்துவ சுற்றுலா திட்டத்தை முன்னெடுக்க நடவடிக்கைகள் எடுக்கப்படும்,"என்றார்.