தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / business

கிடுகிடுவென உயர்ந்த மதுரை மல்லி விலை... பொதுமக்கள் அதிர்ச்சி! - TODAY JASMINE FLOWER RATE

கடும் பனிப்பொழிவு மற்றும் வரத்துக் குறைவு காரணமாக மதுரை பூ மார்க்கெட்டில் மல்லிகைப் பூ கிலோ ரூ.4,200-க்கு விற்பனை செய்யப்படுவதாக வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.

மல்லிகைப் பூ - கோப்புப்படம்
மல்லிகைப் பூ - கோப்புப்படம் (ETV Bharat Tamil Nadu)

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jan 30, 2025, 2:10 PM IST

மதுரை:மதுரை மல்லிகை கிலோ ரூ.4,200-க்கு விற்பனை செய்யப்பட்டதால் பொதுமக்கள் கடும் அதிர்ச்சியடைந்துள்ளனர். அடுத்தடுத்து முகூர்த்த நாட்கள் என்பதாலும், கடும் பனிப்பொழிவு காரணமாக உற்பத்தி வீழ்ச்சி என்பதாலும் கடுமையான விலையேற்றம் என வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.

மதுரை மாட்டுத்தாவணி எம்ஜிஆர் பேருந்து நிலையம் அருகே அமைந்துள்ள மலர் வணிக வளாகம். இங்கு அலங்காநல்லூர், பாலமேடு, உசிலம்பட்டி, ஆவியூர், நெடுங்குளம், வலையங்குளம், திருமங்கலம், சிலைமான், மேலூர், கொட்டாம்பட்டி உள்ளிட்ட மதுரை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்தும், பல்வேறு வகையான பூக்கள் விற்பனைக்கு கொண்டு வரப்படுகின்றன.

மேலும், அண்டை மாவட்டங்களான திண்டுக்கல், தேனி, விருதுநகர், சிவகங்கை, ராமநாதபுரம் உள்ளிட்ட மாவட்டங்களிலிருந்தும் பூக்கள் இங்கே கொண்டு வரப்படுவது வழக்கம். குறிப்பாக மேற்கண்ட பகுதிகளில் விளையும் மல்லிகைப் பூக்களுக்கு எப்போதும் தனி மவுசு உள்ளது. மணம், தன்மை, தரம் காரணமாக மதுரை மல்லிகைக்கு மத்திய அரசின் புவிசார் குறியீட்டு அந்தஸ்து வழங்கப்பட்டுள்ளது. இதனால் மலேசியா, சிங்கப்பூர், துபாய் உள்ளிட்ட அரபு நாடுகளுக்கும் மதுரையிலிருந்து டன் கணக்கில் மல்லிகைப்பூக்கள் ஏற்றுமதி செய்யப்பட்டு வருகிறது.

இதையும் படிங்க:ஏர்டெல் Vs Jio Vs வி.ஐ: டேட்டா இல்லாத புதிய காலிங் திட்டங்கள்; டிராய் அதிரடிக்கு இணங்கிய நிறுவனங்கள்!

இந்நிலையில், மதுரை மல்லிகை இன்று கிலோ ரூ.4,200-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இதனால் பொதுமக்கள் பெரிதும் அதிர்ச்சியடைந்துள்ளனர். இது குறித்து மாட்டுத்தாவணி மீனாட்சி மொத்த பூ வியாபாரிகள் சங்கத்தின் பொருளாளர் முருகன் கூறுகையில், "அடுத்தடுத்து நல்ல முகூர்த்த நாட்கள் என்பதால் மல்லிகைப் பூவின் விலை கடுமையாக ஏற்றம் கண்டுள்ளது. அது மட்டுமன்றி, மல்லிகைப் பூக்கள் வரத்து பெருமளவு குறைந்துள்ளது. இதற்குக் காரணம் மதுரை மாவட்டத்தில் மட்டுமன்றி அண்டை மாவட்டங்களிலும் கடுமையான பனிப்பொழிவு உள்ள காரணத்தால் உற்பத்தியில் கடும் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது" எனத் தெரிவித்தார்.

அதேபோல், பிற பூக்களின் விலை நிலவரத்தைப் பொறுத்தவரை மெட்ராஸ் மல்லி ரூ.1,500, பிச்சி ரூ.2,000, முல்லை ரூ.2,000, செவ்வந்தி ரூ.150, சம்பங்கி ரூ.200, செண்டு மல்லி ரூ.60, கனகாம்பரம் ரூ.2,000, ரோஸ் ரூ.250, பட்டன் ரோஸ் ரூ.230, பன்னீர் ரோஸ் ரூ.300, கோழிக்கொண்டை ரூ.100, அரளி ரூ.250, தாமரை (ஒன்றுக்கு) ரூ.15 என விற்பனை செய்யப்பட்டு வருவதாகவும் வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.

ABOUT THE AUTHOR

...view details