மதுரை: மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் 2025-26 ஆம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையை (Union Budget) நேற்று (பிப்ரவரி 1) சனிக்கிழமை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்தார். இதில், நிதுத்துறை, வேளாண்மை, வேலைவாய்ப்பு, பாதுகாப்பு, போக்குவரத்து, சுகாதாரம், கல்வி, நிதித்துறை, வரி, முதலீடுகள் தொடர்பான பல்வேறு முக்கிய அறிவிப்புகளையும் அவர் வெளியிட்டுள்ளார்.
இந்த நிலையில், இந்த பட்ஜெட் குறித்து வர்த்தக அமைப்பினர் மற்றும் பொதுமக்கள் தங்கள் கருத்துகளை தெரிவித்துள்ளனர். இந்த பட்ஜெட்டில் வேளாண் மற்றும் தொழில் துறை சார்ந்த பல்வேறு திட்டங்கள் மற்றும் செயல்பாடுகள் குறித்து அக்ரி மற்றும் அனைத்து தொழில் வர்த்தக சங்கத்தின் தலைவர் ரத்தினவேலு ஈடிவி பாரத் தமிழ் ஊடகத்திற்கு சிறப்பு பேட்டி அளித்துள்ளார்.
அப்போது பேசிய வார், “2024-2025ஆம் ஆண்டிற்கான பொருளாதார ஆய்வறிக்கையை நேற்று இந்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நாடாளுமன்றத்தில் சமர்ப்பித்தார். முதன்மை பொருளாதார ஆலோசகர் ஆனந்த நாகேஸ்வரராவ், தொழில் துறையில் நிலவுகின்ற பல்வேறு கட்டுப்பாடுகளை தளர்த்தி அவர்கள் தங்களது தொழில் வளர்ச்சியிலும், அதன் விரிவாக்கத்திலும் கவனம் செலுத்த வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளார்.
ஆனால், நேற்று சமர்ப்பிக்கப்பட்ட 2025 - 2026ஆம் ஆண்டிற்கான மத்திய அரசின் பட்ஜெட்டில், அப்பரிந்துரை ஏற்கப்பட்டு எந்த அறிவிப்பும் செய்யப்படாதது அக்ரி மற்றும் அனைத்து தொழில் வர்த்தக சங்கத்திற்கு பெரும் ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
நமது மொத்த உள்நாட்டு உற்பத்தி (ஜிடிபி) கடந்த 3 ஆண்டுகளாக 7 விழுக்காட்டிற்கும் அதிகமாக இருந்தது. ஆனால், நடப்பு ஆண்டில் 6.4 விழுக்காடாகக் குறையும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்திய நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியின் வளர்ச்சி ஒவ்வொரு ஆண்டும் சுமார் 8 விழுக்காடாக இருந்தால்தான், 2047-இல் வளர்ச்சியடைந்த நாடாக இந்தியா மாறும் என்ற பிரதமரின் கனவு இலக்கை அடைய முடியும்.
இதையும் படிங்க :மத்திய பட்ஜெட் 2025: கோவை தொழில் துறையினரின் ஆதரவும் அதிருப்தியும்.. எதிர்பார்ப்புகள் என்ன?
இந்த சூழ்நிலையில் நமது பொருளாதாரத்தில் ஒரு தேக்கநிலைதான் நிலவுகின்றது. மக்கள் கையில் பணப்புழக்கம் இல்லாத காரணத்தால் அவர்கள் தங்களது கொள்முதலை நிறுத்திவிட்டனர். இந்த சூழ்நிலையில் பொருளாதார ஆய்வறிக்கையில் குறிப்பிட்டுள்ள பல பரிந்துரைகளை இந்த பட்ஜெட்டில் நாங்கள் எதிர்பார்த்தோம்.