ஹைதராபாத்:தெலங்கானாவில் தொலைபேசி ஒட்டுக்கேட்பு விவகாரத்தில், எதிர்கட்சித் தலைவர்களின் தொலைபேசி அழைப்புகளை ஒட்டுக்கேட்டதாக குற்றம் சாட்டப்பட்டு, சஸ்பெண்ட் செய்யப்பட்ட முன்னாள் காவல் கண்காணிப்பாளர் ராதாகிஷன் ராவை போலீசார் நேற்று கைது செய்து சிறையில் அடைத்தனர்.
முன்னதாக, நேற்று பஞ்சாரா ஹில்ஸ் காவல் நிலையத்தில், ராதாகிஷன் ராவிடம் நடத்தப்பட்ட விசாரணையின் போது, அவர், தொலைபேசி வாயிலாக ஒட்டுக்கேட்டது மற்றும் ஆதாரங்களை அழித்ததை ஒப்புக்கொண்டார். இந்நிலையில், அவர் அளித்த வாக்குமூலத்தின் பேரில், புலனாய்வுத் துறை அதிகாரியால் கைது செய்யப்பட்டு உள்ளூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். இந்நிலையில், ராதாகிஷன் ராவின் நீதிமன்றக் காவல் ஏப்ரல் 12ஆம் தேதி வரை தொடரும் என போலீசார் தரப்பு தெரிவித்துள்ளனர்.
தெலங்கானவில் முன்னாள் முதலமைச்சர் சந்திரசேகர் ராவ் தலைமையிலான பாரத ராஷ்டிர சமிதி (பி.ஆர்.எஸ்) ஆட்சியின் போது, எதிர்கட்சித் தலைவர்கள், தொழிலதிபர்கள் உள்ளிட்டோரின் தொலைபேசி அழைப்புகளை போலீஸ் அதிகாரிகள் ஒட்டுக்கேட்டதாக குற்றச்சாட்டுகள் எழுந்தன.
அப்போது சிறப்பு புலனாய்வுத் துறை அதிகாரியாக இருந்த பிரனீத் ராவ் மற்றும் பலர் மீது கிரிமினல் நம்பிக்கை மீறல், சாட்சியங்கள் காணாமல் போனது ஆகிய குற்றச்சாட்டுகள் அடிப்படையில், IPC, PDPP சட்டம் மற்றும் IT சட்டம்-2000 இன் பிரிவுகளின் கீழ் சிறப்பு புலனாய்வுப் பிரிவின் கூடுதல் காவல் கண்காணிப்பாளர் ஒருவர், கடந்த மார்ச் 10ஆம் தேதி பஞ்சகுட்டா காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்தார்.