ஆந்திரா:18வது நாடாளுமன்றத் தேர்தல் ஏப்ரல் 19ஆம் தேதி தொடங்கி ஜூன் 1ஆம் தேதி வரை இந்தியா முழுவதும் 7 கட்டங்களாக நடைபெற்றது. இதனுடன் அருணாச்சலப்பிரதேசம், ஒடிசா, சிக்கிம் மற்றும் ஆந்திரா உள்ளிட்ட மாநிலங்களுக்கு சட்டப்பேரவை தேர்தலும் நடைபெற்றது.
இதில் சிக்கிம் மற்றும் அருணாச்சலப் பிரதேச மாநிலங்களுக்கு கடந்த நேற்றைய முன்தினம் வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டன. அதேபோல், நாடு முழுவதும் நடைபெற்ற மக்களவைத் தேர்தல், ஒடிசா மற்றும் ஆந்திரா மாநில சட்டப்பேரவைத் தேர்தல் வாக்கு எண்ணிக்கை இன்று காலை முதல் எண்ணப்பட்டு வருகிறது.
மும்முனை போட்டி?இந்த தேர்தலில் ஆளும் ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் மற்றும் தெலுங்கு தேசம் கட்சி, பாஜக, ஜனசேனா கூட்டணி மற்றும் காங்கிரஸ் ஆகிய 3 கட்சிகள் போட்டியிட்டன. மூன்று கட்சிகளும் ஆந்திராவில் பலம் பொருந்திய கட்சிகள் என்பதால் கடுமையான போட்டி நிலவும் என கருத்துக் கணிப்பு முடிவுகள் வெளியாகின.
ஆனால், காலை முதல் அறிவிக்கப்பட்டு வரும் தேர்தல் முடிவுகளை பார்க்கும் போது அதற்கு துளியும் வாய்ப்பு இல்லை என்பது போல்தான் இருந்தது. காரணம், ஆந்திராவில் உள்ள பெரும்பான்மைக்குத் தேவையான இடங்களில் பாஜக - தெலுங்கு தேசம் கட்சி கூட்டணி கட்சி வேட்பாளர்கள் காலை முதலே பல்வேறு இடங்களில் முன்னணி வகித்து வந்தது.
தற்போதைய நிலவரப்படி தெலுங்கு தேசம் 73 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது, மேலும் 62 தொகுதிகளில் முன்னிலை வகிக்கிறது. பவன் கல்யாண், தலைமையிலான ஜனசேனா கட்சி 13 இடங்களில் வெற்றி பெற்றதுடன் 8 இடங்களில் முன்னிலை வகிக்கிறது.