தமிழ்நாடு

tamil nadu

"அரசியல் மக்களாட்சியை சமூக மக்களாட்சியாக மாற்ற வேண்டும்" - குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு சுதந்திர தின உரை! - president independence day speech

By ETV Bharat Tamil Nadu Team

Published : Aug 14, 2024, 7:11 PM IST

அரசியல் மக்களாட்சியை சமூக மக்களாட்சியாக மாற்ற வேண்டும் என்ற டாக்டர்.அம்பேத்கரின் கோட்பாட்டை மேற்கோள்காட்டி, குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு தமது சுதந்திர தின உரையை ஆற்றினார்.

குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு சுதந்திர தின உரை
குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு சுதந்திர தின உரை (Credit - Sansad TV)

டெல்லி:நாட்டின் 78 ஆவது சுதந்திர தினம் நாளை நாடு முழுவதும் கொண்டாடப்பட உள்ளது. இத்தினத்தை முன்னிட்டு, குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு, இன்று மாலை 7 மணியளவில் நாட்டு மக்களுக்கு உரையாற்றினார். அவரது உரையில் இடம்பெற்ற முக்கிய அம்சங்கள்:

என் அன்பார்ந்த நாட்டு மக்களே, உங்கள் அனைவருக்கும் எனது மனமார்ந்த சுதந்திரத் திருநாள் வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். 78 ஆவது சுதந்திர தின கொண்டாட்டங்களில் நாட்டு மக்கள் அனைவரும் ஈடுபட்டுக் கொண்டிருப்பதைக் காணும்போது எனக்கு மட்டற்ற மகிழ்ச்சி ஏற்படுகிறது.

நாட்டுப்பற்றாலும், வீரத்தாலும் உந்தப்பட்ட தேசப்பற்றாளர்கள் நாட்டின் சுதந்திரத்திற்காக பல்வேறு தியாகத்தைப் புரிந்தார்கள். தேசத்தந்தை அண்ணல் காந்தியடிகள் சுதந்திரப் போராட்டத்தின் பல்வேறு பாரம்பரியங்களையும், அவற்றின் பலவகை வெளிப்பாடுகளையும் ஒருங்கிணைத்தார்.

அவருடன் கூடவே சர்தார் படேல், நேதாஜி சுபாஷ் போஸ், பாபா சாகேப் அம்பேத்கர், பகத்சிங், சந்திரசேகர் ஆஸாத் போன்ற பல்வேறு மகத்தான மக்கள்நாயகர்களும் கூட ஆக்கப்பூர்வமாகப் பங்களித்தார்கள். தேசம் தழுவிய இப்போராட்டத்தில் அனைத்து சமூகங்களும் பங்கெடுத்தன. பழங்குடிகளில் தில்கா மாஞ்ஜி, பிர்ஸா முண்டா, லக்ஷ்மண் நாயக், ஃபூலோ-ஜானோ போன்ற இன்னும் பலரின் உயிர்த்தியாகம், இன்று பெருமளவில் போற்றப்பட்டு வருகிறது.

நமது அரசியலமைப்புச் சட்டத்தின் சிற்பியான டாக்டர் பி.ஆர். அம்பேத்கரின் சொற்களை என்றும் நாம் நினைவில் கொள்ள வேண்டும். "நாம் நமது அரசியல் மக்களாட்சியை சமூக மக்களாட்சியாக ஆக்க வேண்டும். சமூக மக்களாட்சி ஆதாரமாக இல்லாதவரை, அரசியல் மக்களாட்சியால் நிலைத்திருக்க முடியாது" என்று டாக்டர் பி.ஆர். அம்பேத்கர் தெளிவாகக் கூறியிருக்கிறார்.

சமூகநீதி என்பது அரசின் முதன்மை நோக்கமாகும். பட்டியலினத்தவர், பழங்குடியினர் மற்றும் விளிம்புநிலையில் வாழும் சமூகத்தின் பிற மக்களின் நலனுக்காக இதுவரை இல்லாத பல முன்னெடுப்புக்களை அரசாங்கம் மேற்கொண்டிருக்கிறது.

இந்த ஆண்டு நமது தேசத்தில் பொதுத் தேர்தல் நடைபெற்றது. இத்தேர்தலில் மொத்த வாக்காளர்களின் எண்ணிக்கை கிட்டத்தட்ட 97 கோடி. இதுவே கூட ஒரு வரலாற்றுப் புகழ்வாய்ந்த நிலை. பாரதம் வாயிலாக இந்த வெற்றிகரமான தேர்தல் நடத்தப்பட்டிருப்பது, ஒட்டுமொத்த உலகின் ஜனநாயகச் சக்திகளுக்கும் பலத்தை அளிக்கிறது.

2021ஆம் ஆண்டு முதல் 2024க்கு இடைப்பட்ட காலத்தில், எட்டு சதவீத வருடாந்திர வளர்ச்சி வீதத்தை அடைந்திருப்பதன் மூலம் மிக வேகமாக முன்னேற்றம் காணும் பொருளாதாரங்களில் இந்தியா இடம்பிடித்திருக்கிறது.

வருங்காலத் தொழில்நுட்பத்தின் அற்புதமான திறனை மனதில் கொண்டு, குறைக்கடத்தி மற்றும் செயற்கை நுண்ணறிவு போன்ற பல துறைகளுக்கு ஊக்கமளிப்பதில் அரசு மிகுந்த ஆர்வமாக உள்ளது. வங்கித் துறையிலும், நிதித்துறையிலும் சிறப்பான செயல்பாடுகளும் அதிகரித்துள்ளன. இவற்றின் பயனாக இந்தியா வளர்ச்சியடைந்த தேசங்களின் பட்டியலில் இடம்பெறும்.

இளைஞர் நலன், பெண்கள் முன்னேற்றம், விண்வெளி ஆராய்ச்சி உள்ளிட்ட பல்வேறு துறைகளிலும் இதுவரை காணாத முன்னேற்றத்தை தேசம் அடைந்திருக்கிறது.

விளையாட்டு துறையிலும் கூட, நமது தேசம் கடந்த பத்தாண்டுகளில் அதிக முன்னேற்றத்தை எட்டியிருக்கிறது. தற்போது நிறைவடைந்துள்ள பாரீஸ் ஒலிம்பிக் போட்டிகளில் நம் நாட்டின் விளையாட்டு வீரர்கள்-வீராங்கனைகளின் அர்ப்பணிப்பு மற்றும் முயற்சியை பாராட்டுகிறேன்.

கிரிக்கெட் போட்டிகளில் இந்தியா டி20 உலகக் கோப்பையை வென்று, ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியிருக்கிறது. சதுரங்கப் போட்டிகளில் கூர்மையான திறன்படைத்த விளையாட்டு வீரர்கள் தேசத்திற்குப் பெருமை சேர்த்திருக்கிறார்கள். சதுரங்கத்தில் பாரத யுகத்தின் தொடக்கம் என்று இது கருதப்படுகிறது. பேட்மிண்டன், டென்னிஸ் மற்றும் பிற விளையாட்டுக்களில் நமது விளையாட்டு வீரர்கள் உலக அரங்கில் தங்களுடைய அடையாளத்தை உருவாக்கி வருகிறார்கள்.

நாட்டு மக்கள் அனைவரும் மீண்டுமொரு சுதந்திர தின நல்வாழ்த்துகள்.நன்றி! ஜெய் ஹிந்த்!! ஜெய் பாரத்!!!

இதையும் படிங்க:பூமி கண்காணிப்புக்கான EOS-08 செயற்கைக்கோளுடன் விண்ணில் பாய்கிறது SSLV D3 ராக்கெட்!

ABOUT THE AUTHOR

...view details