புதுடெல்லி:நாடாளுமன்ற வளாகத்தில் நடந்த மோதலில் இரண்டு பாஜக எம்பிக்கள் காயம் அடைந்த விவகாரத்தில் மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி மீது போலீசார் வழக்குப் பதிவு செய்திருப்பதற்கு காங்கிரஸ் கண்டனம் தெரிவித்துள்ளது.
வன்முறையற்ற பாதை:தேசிய ஜனநாயக கூட்டணி-இந்தியா கூட்டணி இடையே நேரிட்ட அமளிக்கு இடையே நாடாளுமன்றம் தேதி குறிப்பிடப்படாமல் ஒத்தி வைக்கப்பட்டது. இந்த நிலையில் ராகுல் காந்தி மீது போலீசார் வழக்கு பதிவு செய்திருப்பது குறித்து கருத்துத் தெரிவித்துள்ள ராஜஸ்தான் மாநில முன்னாள் முதலமைச்சர் அசோக் கெய்லாட், "உண்மையின் பாதையை கடைபிடிக்கும், மனித நேயத்துடன் சேவை செய்யும் எண்ணம், பழக்கம், சிந்தனைகளை கொண்ட ராகுல் காந்தியைப் பற்றி ஒவ்வொருவருக்கும் தெரியும். இந்த நாட்டு மக்களுக்காக வன்முறையற்ற வழியில் சேவையாற்றுதல், அன்பு மற்றும் சகோதரத்துவத்தை தமது கடமையின் ஒரு பகுதியாக கொண்டிருந்ததால் நாடு முழுவதும் 4000 கி.மீ பாதையாத்திரையாக ராகுல் சென்றார். ராகுல் காந்தியின் குடும்பம் வன்முறையற்ற பாதையில் நம்பிக்கை வைத்திருக்கிறது. மரண தண்டனை விதிக்கப்பட்ட ராஜிவ் காந்தி கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்களை அவரின் குடும்பம் மன்னித்தது.
ராகுல் காந்திக்கு எதிராக காலையில் குற்றச்சாட்டு கூறப்பட்டது. அதே நாள் மாலையில் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்படுகிறது. ஒரு ஆழமான சதித்திட்டத்தின்படி இவ்வளவு அவசரம் காட்டப்படுகிறது என்பது தெளிவாகிறது. பாஜக எம்பிக்கள் எங்களுடைய காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்க்கே, ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி மற்றும் இதர எம்பிக்களை தள்ளியது, மரியாதை குறைவாக நடத்தியது குறித்து ஊடகத்தில் குறிப்பிடப்படவில்லை.