ஹைதராபாத்:பெண்ணாக இருந்து ஆணாக மாறிய மூத்த ஐஆர்எஸ் அதிகாரியின் பாலின மாற்றத்தை மத்திய நிதி அமைச்சகம் ஏற்றுக் கொண்டுள்ளது. இந்திய குடிமைப்பணி சேவை வரலாற்றில் முதல் முறையாக நடந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஹைதராபாத்தில் அமைந்துள்ள சுங்க வரி மற்றும் சேவை வரி மேல்முறையீட்டு தீர்ப்பாய ஆணையர் அலுவலகத்தில் இணை ஆணையராக பணியாற்றி வந்த அனுசுயா என்ற பெண் அதிகாரி, அனுகதிர் சூர்யா என ஆணாக மாறியுள்ளார். அவரது பாலின மாற்றத்தை மத்திய நிதி அமைச்சகம் ஏற்றுக் கொண்டுள்ளது.
பாலின மாற்றம் தொடர்பாக மத்திய நிதி அமைச்சகத்திடம் அவர் கோரிக்கை வைத்துள்ளார். அதனை அமைச்சகம் பரிசீலனை செய்து ஏற்றுக்கொண்டு இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது. அதில், அனுசுயாவின் கோரிக்கை பரிசீலிக்கப்பட்டது. இனி அனைத்து அதிகாரப்பூர்வ பதிவுகளிலும், எம்.அனுகதிர் சூர்யா என அவர் அறியப்படுவார் என்று மத்திய வருவாய்த்துறை தனது உத்தரவில் தெரிவித்துள்ளது.