சமஸ்திபூர் / பீகார்: நள்ளிரவில் காணாமல் போன குழந்தைகள் வீட்டின் அருகில் உள்ள கிணற்றில் இருந்து சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. சம்பவம் தொடர்பாக காவல்துறையினர் பெற்றோரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.
பீகாரின் சமஸ்திபூர் மாவட்டம், மாலிநகர் கிராமத்தின் 8-ஆவது வார்டில் இந்த சம்பவம் நடந்துள்ளது. சக்மேகாசி காவல் நிலையத்திற்கு உட்பட்ட இந்த கிராமத்தில், சந்தன் குமாரின் மூன்று குழந்தைகளை காணவில்லை என்று புகார் அளிக்கப்பட்டது. பெற்றோரின் புகாரை அடுத்து காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டனர்.
குழந்தைகளை தேடியபோது, எவ்வித தடயமும் சிக்காததால், காவல்துறை தரப்பில் இருந்து மோப்ப நாய்கள் வரவழைக்கப்பட்டது. அவை வீட்டின் அருகே இருந்த கிணற்றைப் பார்த்து ஓடியதால், காவல்துறையினர் சந்தேகமடைந்து கிணற்றை ஆய்வு செய்தனர். அந்த நேரத்தில் கிணற்றில் குழந்தைகளின் சடலங்கள் இருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்தனர்.
சம்பவ இடத்தில் பாதுகாப்பு பணியில் இருக்கும் காவல்துறையினர் (ETV Bharat) உடனடியாக, ஊர் மக்கள் உதவியுடன் காவல்துறை உடல்களைக் கைப்பற்றி, உடற்கூராய்வுக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். இறந்தது சந்தன் குமாரின் இரண்டு வயது மகன் தனிஷ்க் குமார், நான்கு வயது தருண்குமார், 6 வயது மகள் தான்யா குமாரி என அடையாளம் காணப்பட்டது. ஊரையே சோகத்தில் ஆழ்த்திய இந்த சம்பவம் தொடர்பான விசாரணையை காவல்துறை முடிக்கிவிட்டது.
சமஸ்திபூர் காவல் கண்காணிப்பாளர் அசோக் மிஸ்ரா சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினார். சந்தேகத்தின் அடிப்படையில் சந்தன் குமார், அவரது மனைவி ஆகியோரிடம் விசாரணை நடத்தி வருவதாக அவர் தெரிவித்தார். மேலும், “இரவில் மாயமான குழந்தைகள் காலையில் மோப்ப நாய்கள் உதவியுடன் சடலமாக மீட்கப்பட்டுள்ளனர். இதுகுறித்து தீவிர விசாரணை மேற்கொள்ளப்படுகிறது,” எனத் தெரிவித்தார்.
சமஸ்திபூர் காவல் கண்காணிப்பாளர் அசோக் மிஸ்ரா (ETV Bharat) தொடர்ந்து பேசிய அவர், “தடயவியல் நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு சோதனை செய்யப்படுகிறது. குழந்தைகள் கிணற்றில் இருந்து மீட்கப்பட்ட நாளின் முந்தைய தினம் தன் மனைவியுடன் சண்டைபோட்டதாக சந்தன் குமார் காவல்துறையினரிடம் தெரிவித்துள்ளார். அவர்கள் இருவருக்கும் இடையில் அவ்வப்போது பிரச்னைகள் இருந்ததாக பதிவு செய்துள்ளனர். அதனடிப்படையில், அவர்களிடம் விசாரித்து வருகிறோம்,” என்று கூறினார்.
மூன்று குழந்தைகளின் சடலங்கள் கிணற்றில் இருந்து மீட்கப்பட்ட சம்பவம், கிராமத்தில் காட்டுத்தீ போல் பரவியது. மேலும், குழந்தைகள் இருந்த வீட்டின் அருகே வேறு யாரும் இல்லாததால், காவல்துறையினருக்கு பெற்றோர் மீது சந்தேகம் இருப்பதாகத் தெரிவித்துள்ளனர். அதுமட்டுமில்லாமல், முன்விரோதம் காரணமாக குழந்தைகள் கிணற்றில் வீசப்பட்டனரா என்ற கோணத்திலும் காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர்.