டீக் கடைக்குள் புகுந்து காட்டு யானை சூறையாடல்! முட்டைகோஸ் லாரியை மடக்கி சேதம்!
Published : Dec 9, 2023, 5:51 PM IST
ஈரோடு: பண்ணாரி அம்மன் கோயில் அருகே உள்ள டீ கடைக்குள் புகுந்து சூறையாடிய காட்டு யானை, சாலை அருகில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வாகனத்தில் இருந்த முட்டைகோஸ் மூடைகளையும் சேதப்படுத்தியது. பிரசித்தி பெற்ற பண்ணாரி மாரியம்மன் கோயில் ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அடுத்துள்ள அடர்ந்த வனப்பகுதிக்குள் அமைந்துள்ளது.
தினமும் இந்த கோயிலுக்கு பக்தர்கள் வந்து செல்வது வழக்கம். இந்த நிலையில் இரவு வனப்பகுதியை விட்டு வெளியேறிய காட்டு யானை ஒன்று கோயிலை ஒட்டி அமைந்து உள்ள சத்தியமங்கலம் - மைசூர் தேசிய நெடுஞ்சாலையில் நடமாடிக் கொண்டிருந்தது. திடீரென அப்பகுதியில் இருந்த ஒரு டீக் கடைக்குள் புகுந்த அந்த காட்டு யானை தனது தும்பிக்கையால் கடைக்குள் இருந்த பாத்திரங்கள் உள்ளிட்ட பொருட்களை சேதப்படுத்தியதோடு கடையில் வைக்கப்பட்டு இருந்த கடலை மிட்டாய் பாட்டில்களையும் உடைத்து சேதப்படுத்தியதாக கூறப்படுகிறது.
மேலும் சாலையோரம் நின்ற வேனில் இருந்த முட்டைகோஸ் மூடைகளை தன் தும்பிக்கையால் பிரித்து அதனை சாப்பிட்டதாக அப்பகுதியில் இருந்த மக்கள் கூறினர். இந்நிலையில் காட்டு யானை நடமாட்டத்தை கண்டு கோயிலுக்கு வந்த பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் அச்சம் அடைந்தனர்.
பின் இதுகுறித்த தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த வனத்துறையினர் யானையை விரட்டும் பணியில் ஈடுபட்டனர். அரை மணி நேர போராட்டத்திற்கு பின் காட்டு யானையை வனப்பகுதிக்குள் விரட்டியடித்தனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பான சூழல் நிலவியது.