"விடுதலை படத்தை எங்க குழந்தைகள் பார்க்க கூடாதா?" - போலீசிடம் வாக்குவாதம் செய்த இளம்பெண் வீடியோ! - soori
🎬 Watch Now: Feature Video
![ETV Thumbnail thumbnail](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/640-480-18140165-thumbnail-16x9-vdu.jpg)
சென்னை: இயக்குநர் வெற்றிமாறன் இயக்கத்தில் சூரி, விஜய் சேதுபதி உள்ளிட்டோர் நடித்துள்ள திரைப்படம் விடுதலை படத்தின் முதல் பாகம் நேற்று திரையரங்குகளில் வெளியானது. தமிழ்நாட்டை உலுக்கிய வாச்சாத்தி வன்கொடுமை சம்பவத்தைப் பற்றிய படமாக விடுதலை எடுக்கப்பட்டுள்ளது. இப்படம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது.
விடுதலை படத்தில் அதீத வன்முறைக் காட்சிகள் இருப்பதால் அதற்கு ஏ சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது. இதனால் 18 வயதுக்கு கீழ் உள்ளவர்கள் இப்படத்தைப் பார்க்க கூடாது என்ற விதி உள்ளது. இந்த நிலையில் சென்னை விருகம்பாக்கத்தில் உள்ள தனியார் திரையரங்கில் பெற்றோருடன் படம் பார்த்துக்கொண்டிருந்த குழந்தைகளை வெளியேறுமாறு அங்கு வந்த போலீசார் தெரிவித்துள்ளனர்.
ஆனால் இதற்கு மறுப்பு தெரிவித்து அங்கிருந்த இளம்பெண் மக்களின் வலியைப் பேசும் படத்தை குழந்தைகள், குடும்பத்துடன் பார்க்க கூடாதா? சாதி தீண்டாமை திரையரங்குகளிலும் உள்ளது என்று வாக்குவாதம் செய்ததால் போலீசார் செய்வதறியாது நின்றனர். இந்த சம்பவம் நடந்து 10 நிமிட தாமதத்திற்கு பிறகு படம் திரையிடப்பட்டது. தற்போது அந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
சமீபத்தில் சென்னையில் உள்ள பிரபல ரோகிணி திரையரங்கில் நரிக்குறவர் இனப் பெண்ணை உள்ளே விட மறுத்துத் தீண்டாமை செயலில் ஈடுபட்ட ஊழியரின் செயல் தமிழ்நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதற்கு பல்வேறு திரை பிரபலங்கள், அரசியல் தலைவர்கள் தங்களது கண்டனங்களைப் பதிவு செய்து வரும் நிலையில் சென்னையில் மற்றுமொரு திரையரங்கில் நடந்த சம்பவம் விவாத பொருளாகியுள்ளது.