thumbnail

By

Published : Mar 18, 2023, 4:10 PM IST

ETV Bharat / Videos

வீடியோ: உறையூர் கமலவல்லி நாச்சியார் கோயில் தெப்பத் திருவிழா கோலாகலம்

திருச்சி: 108 திவ்யதேசங்களில் 2ஆவதாக விளங்குவதும், ஆழ்வார்களால் மங்களாசாசனம் செய்யப்பட்டதும், திருமணத்தடை நீங்க திருவருள் புரியும் உறையூர் கமலவல்லி தாயார் கோயில் திருச்சியில் அமைந்துள்ளது. இந்த கோயிலில் ஆண்டுதோறும் தெப்பத் திருவிழா 7 நாட்கள் வெகு விமரிசையாக கொண்டாடப்படுவது வழக்கம். 

அந்த வகையில், கடந்த மார்ச் 12ஆம்‌ தேதி தொடங்கிய தெப்பத் திருவிழாவின் 6ஆம் நாளான நேற்று (மார்ச் 17), கமலவல்லி தாயாரின் தெப்ப உற்சவம் நடைபெற்றது. நேற்று இரவு சாய்ந்த கொண்டை அணிந்து, கிளி மாலை, மார்பில் பதக்கம் மற்றும் திருவாபரணங்கள் சூட்டிய நிலையில் வெள்ளிப் பல்லக்கில் எழுந்தருளிய கமலவல்லி தாயார், ஆஸ்தான மண்டபத்தில் பக்தர்களுக்கு சேவை சாதித்தார். 

பின்னர், உள்பிரகாரங்களில் உலா வந்த கமலவல்லி தாயார், ஆலய தீர்த்தக்குளத்தில் வண்ணமிகு மின் விளக்குகளாலும், பூக்களைக் கொண்டும் எழிலுடன் அலங்கரிக்கப்பட்ட தெப்பத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சி அளித்தார். தெப்பமானது 3ஆவது முறை குளத்தில் வலம் வந்தது. தொடர்ந்து நேற்று இரவு 9 மணிக்கு தெப்ப மண்டபத்தில் இருந்து ஆளும் பல்லக்கில் புறப்பட்டு திருவீதி வலம் வந்து, இரவு 10.15 மணியளவில் மூலஸ்தனம் சேர்ந்தார். 

இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். இதனைத் தொடர்ந்து இன்று (சனிக்கிழமை) மாலை 4.30 மணிக்கு தீர்த்தவாரி கண்டருளி, தெப்ப மண்டபம் சேருகிறார். அங்கு திருமஞ்சனம் நடைபெறுகிறது. பின்னர் இரவு 9 மணிக்கு ஆளும் பல்லக்கில் தாயார் புறப்பட்டு, பந்தக்காட்சியுடன் வீதி உலா வந்து மண்டபம் சேருகிறார். இரவு 10.15 மணிக்கு மூலஸ்தானம் சேருகிறார். முன்னதாக பக்தர்களின் வருகையை ஒட்டி உறையூர் பகுதியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. 

ABOUT THE AUTHOR

author-img

...view details

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.