ஆவணி முதல் முகூர்த்த நாள்.. திருச்செந்தூர் கோயிலில் 100-க்கும் மேற்பட்ட திருமணங்கள்!
தூத்துக்குடி: திருச்செந்தூர் அருள்மிகு சுப்ரமணிய சுவாமி கோயிலில் ஆவணி மாத முதல் சுப முகூர்த்த தினத்தை முன்னிட்டு இன்று (ஆகஸ்ட் 20) நூற்றுக்கும் மேற்பட்ட திருமணங்கள் நடைபெற்றன.
அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடாக திருச்செந்தூர் சுப்ரமணிய சுவாமி கோயில் விளங்கி வருகிறது. கடற்கரைக்கு அருகில் அமைந்திருப்பதால், நாள்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து சுவாமியை தரிசனம் செய்கின்றனர். மேலும், அரசியல் கட்சி பிரமுகர்கள், முக்கிய பிரமுகர்கள், சினிமா பிரபலங்கள் சுவாமி தரிசனம் செய்வதால், கோயிலுக்கு வரும் பக்தர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
இன்று ஆவணி மாத முதல் சுப முகூர்த்த தினம் என்பதால் அதிகாலை 4 மணிக்கு கோயில் நடை திறக்கப்பட்டு 4.30 மணிக்கு விஸ்வரூப தீபாரதனையும், ஆறு மணிக்கு உதயமார்தாண்ட அபிஷேகமும், மற்ற கால பூஜைகளும் வழக்கம்போல் நடைபெற்று வருகின்றன. மேலும், ஞாயிற்றுக்கிழமை விடுமுறை தினத்தையொட்டி தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து பக்தர்கள் வருகை புரிந்தனர். இதனால் கோயில் வளாகம் திருவிழாக் கோலம் போல் காட்சி அளித்தது.
மேலும், ஆவணி மாத முதல் முகூர்த்தம் என்பதால் கோயிலில் நூற்றுக்கும் மேற்பட்ட திருமணங்களும் நடைபெற்றன. அதிகாலை முதலே கோயிலில் குவிந்த பக்தர்கள், கடல் மற்றும் நாழிக்கிணறு புனித தீர்த்தத்தில் நீராடி நீண்ட வரிசையில் காத்திருந்து சுவாமியை தரிசனம் செய்து வருகின்றனர்.