சுருளிமலை ஐயப்பன் கோயிலில் உற்சவ விழா! - theni
🎬 Watch Now: Feature Video


Published : Dec 4, 2023, 4:06 PM IST
தேனி: மேற்கு தொடர்ச்சி மலைத்தொடரில் அமைந்துள்ளது சுருளி அருவி. இது புண்ணிய தலமாகவும், முக்கிய சுற்றுலாத் தலமாகவும் உள்ளது. முப்பத்து முக்கோடி தேவர்களும், நாற்பத்து எண்ணாயிரம் ரிஷிகளும் தவம் புரிந்ததாகக் கூறப்படும் இந்த சுருளி மலையில் உள்ள ஐயப்பன் ஆலயத்தில் இரண்டு நாள் உற்சவ விழா வெகு விமரிசையாக நடைபெற்றது.
இந்த கோயிலில் உள்ள ஐயப்பனுக்கு வண்ண மலர் மாலைகளால் சிறப்பு அலங்காரங்கள் செய்யப்பட்டு, பஞ்ச கற்பூர தீபாராதனை காட்டப்பட்டது. பின்னர் பதினெட்டு படிகளுக்கும் சிறப்பு பூஜை செய்வதற்காகக் கலசங்களை வைத்து பூஜைகள் நடத்தப்பட்டது. இதனைத் தொடர்ந்து ஐயப்பன் கோயிலில் உள்ள 18 படிகளுக்கும் கலச நீர் ஊற்றப்பட்டு மாலை அணிவிக்கப்பட்டுப் படி பூஜை சிறப்பாக நடத்தப்பட்டது.
பின்னர் இந்த 18 படிகளிலும் தீபம் வைக்கப்பட்டு சிறப்பாக அலங்கரிக்கப்பட்டன. அதனைத் தொடர்ந்து சிறப்பு அலங்காரத்தில் காட்சி தந்த ஐயப்பனுக்கு அத்தால பூஜை நடத்தப்பட்டு பஞ்ச கற்பூர தீபாராதனை காட்டப்பட்டுச் சிறப்பு பூஜை செய்யப்பட்டது. நேற்று (டிசம்பர்.3) நடந்த இந்த பூஜையில் அப்பகுதியைச் சேர்ந்த ஏராளமான பொதுமக்கள் மற்றும் ஐயப்ப பக்தர்கள் கலந்து கொண்டு சிறப்புப் படி பூஜையைக் கண்டு மகிழ்ந்தனர்.