திருப்பூரில் வக்பு வாரியத்திற்குச் சொந்தமான சொத்துக்கள் மீட்பு! - supereme court
🎬 Watch Now: Feature Video
![ETV Thumbnail thumbnail](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/26-10-2023/640-480-19859056-thumbnail-16x9-waqf.jpg)
![ETV Bharat Tamil Nadu Team](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/authors/tamilnadu-1716535724.jpeg)
Published : Oct 26, 2023, 7:57 AM IST
திருப்பூர்: காதர் பேட்டையில் உள்ள ‘அஹ்லே சுன்னத் ஜமாத்’ பள்ளிவாசல் உள்பட இரண்டு பள்ளிவாசல் மற்றும் 100க்கும் மேற்பட்ட கடைகளை கடந்த முப்பது ஆண்டுகளாக நிர்வகித்து வந்த சலீம் (எ) அப்துல் ரகுமான் முறைகேட்டில் ஈடுபட்டதாக காதர்பேட்டை பூர்வீக ஜமாத்தார், தமிழ்நாடு வக்பு வாரியத்தில் 2013ஆம் ஆண்டு புகார் அளித்ததாக கூறப்படுகிறது.
இதனைத் தொடர்ந்து, வக்பு வாரியம் சலீமை நிர்வாகப் பொறுப்பில் இருந்து அகற்றியது. இதனை எதிர்த்து சலீம் தொடர்ந்த வழக்கு சென்னை உயர் நீதிமன்றத்தில் கடந்த 2015ஆம் ஆண்டு தள்ளுபடி செய்யப்பட்டது. பின்னர், உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டதால், 10 ஆண்டுகளாக நீதிமன்றத்தில் வழக்கு நடைபெற்று வந்தது.
இந்த நிலையில், கடந்த ஆகஸ்ட் 1ஆம் தேதி உச்ச நீதிமன்றம் நிர்வாகப் பொறுப்பில் உள்ள சலீமை நீக்கி பள்ளிவாசல் மற்றும் அதற்கு சொந்தமான சொத்துக்களை கையகப்படுத்தி, வக்பு வாரியமே நிர்வாகம் செய்ய வேண்டும் என்ற தீர்ப்பை உறுதி செய்தது. அதனைத் தொடர்ந்து போலீசார் பாதுகாப்புடன் வக்பு வாரிய அதிகாரிகள், சலீமிடமிருந்து பல கோடி ரூபாய் மதிப்பிலான 3 பள்ளிவாசல் மற்றும் 140 கடைகள் உள்பட அசையா சொத்துக்களை கையகப்படுத்தினர்.