பிரேக் பிடிக்காத அரசு பேருந்தை சாலையின் நடுவில் உள்ள தடுப்பின் மீது மோதி நிறுத்திய ஓட்டுநர்!
Published : Nov 1, 2023, 4:19 PM IST
சென்னை: வண்ணாரப்பேட்டை போக்குவரத்து காவல் எல்லைக்குட்பட்ட பேஷன் பிரிட்ஜ் சாலையில் வள்ளலார் நகர் பேருந்து நிலையத்திற்குச் சென்ற தடம் என் 48C என்கின்ற மாநகரப் பேருந்து ஒன்று தங்க சாலை மேம்பாலம் அருகே சென்று கொண்டிருந்தது. அப்போது மாநகர பேருந்து பிரேக்கில் திடீரென கோளாறு ஏற்பட்டுள்ளது.
இதனால் முன்னே சென்ற இருசக்கர வாகனங்களுக்கு, பேருந்தினுள் இருந்த பயணிகளுக்கும் ஆபத்து ஏற்படாத வகையில், சுதாரித்த பேருந்து ஓட்டுநர் சாலை நடுவே உள்ள தடுப்பின் மீது வேகமாக மோதி பேருந்தை நிறுத்தினார். இதில் பேருந்தில் பயணித்த பயணிகள் சிலருக்கு லேசான காயங்களுடன் உயிர் தப்பினர்.
மேலும், பேருந்து ஓட்டுநர் லோகநாதன் என்பவருக்கும் சிறிது காயங்கள் ஏற்பட்டுள்ளது. இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்குச் சென்ற வன்னாரப்பேட்டை போக்குவரத்து காவல் துறையினர் காயமடைந்த நபர்களை ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதனால் அப்பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. மேலும் சாலையில் விபத்துக்குள்ளான பேருந்தை அப்புறப்படுத்தி போக்குவரத்து நெரிசலைக் காவல் துறையினர் விரைந்து சரி செய்தனர். மேலும் இந்த விபத்து குறித்து போக்குவரத்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதையும் படிங்க: யூடியூபர் டிடிஎஃப் வாசனுக்கு நிபந்தனை ஜாமீன் - சென்னை உயர்நீதிமன்றம்!