குடியாத்தம் அருகே கோயிலில் நுழைந்து சாதுர்யமாக திருடிய இளைஞர்: சிக்கியது எப்படி? - theft in temple
🎬 Watch Now: Feature Video
![ETV Thumbnail thumbnail](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/09-08-2023/640-480-19220987-thumbnail-16x9-theft.jpg)
வேலூர்: குடியாத்தம் அருகே உள்ள புவனேஸ்வரிபேட்டை பகுதியில் ஸ்ரீமுத்துமாரியம்மன் கோயில் உள்ளது. இந்நிலையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை(ஆக.6) கோயிலில் நுழைந்த மர்மநபர் ஒருவர் கோயிலுக்குச் சொந்தமான சுமார் 30 ஆயிரம் மதிப்புள்ள பொருட்களைத் திருடிச் சென்றுள்ளார். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
அதைத் தொடர்ந்து, கோயிலில் உள்ள சிசிடிவி கேமராக்களை ஆய்வுசெய்தபோது, அதே பகுதியைச் சேர்ந்த நித்தியானந்தம் வயது 24 என்பவர் தான், திருட்டுச் சம்பவத்தில் ஈடுபட்டார் என்ற உண்மை தெரிய வந்துள்ளது. இதனிடையே புவனேஸ்வரிபேட்டை பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் குடியாத்தம் காவல் நிலையத்தில் புகார் அளித்ததன் பேரில், நித்தியானந்தத்தை வலை வீசித் தேடி வந்துள்ளனர்.
இந்த நிலையில், இன்று காலை அப்பகுதி மக்கள் நித்தியானந்தத்தை கண்டுபிடித்து அவரை மின் கம்பத்தில் கட்டி வைத்து குடியாத்தம் காவல் துறையினருக்குத் தகவல் தெரிவித்துள்ளனர். அந்த தகவலின் பேரில் விரைந்து வந்த காவல் துறையினர் நித்தியானந்தத்தை கைது செய்து காவல் நிலையம் அழைத்துச் சென்று விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தற்போது வசிக்கும் ஊரில் உள்ள கோயிலில் நுழைந்து அவர் திருடிய பொருட்களை மூட்டை கட்டி எடுத்துச்சென்ற சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.