சத்துணவு ஊழியர்கள் சேலைகளைக் கொண்டு கூடாரம் அமைத்து போராட்டம்!
தமிழ்நாடு முழுவதும் சத்துணவுத் திட்டத்தின் கீழ் 38 ஆண்டுகளாக பணிபுரிந்து ஓய்வு பெறும் ஊழியர்களுக்கு, வெறும் ரூ.2000 மட்டுமே ஓய்வூதியம் வழங்கப்பட்டு வருவதாகவும், இதனை உயர்த்தி வழங்குவதாக 2016ஆம் ஆண்டு மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்ற வேண்டும் என்ற கோரிக்கையை முன்னிறுத்தி போராட்டம் நடைபெற்றது. தொடர்ந்து நான்காவது நாளாக நடைபெற்ற போராட்டத்தில் இன்று வெயில் அதிகமாக இருந்ததால், போராட்டம் நடத்திவரும் இடத்தில் கூடாரம் அமைக்க அனுமதி கேட்டனர். ஆனால் அதற்கு காவல் துறை அனுமதி அளிக்காததால், சத்துணவு ஊழியர்கள் தாங்கள் கொண்டு வந்திருந்த சேலையைக் கூடாரமாக அமைத்து அதற்குள் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.