திருச்சுழி வட்டாட்சியர் அலுவலகத்தில் பணிபுரியும் மண்டல துணை வட்டாட்சியரான சிவனாண்டி தனது சொந்த ஊரான செம்பட்டியில் இருந்து திருச்சுழி வட்டாட்சியர் அலுவலகத்திற்கு அவரது இரு சக்கர வாகனத்தில் வந்துகொண்டிருந்தார்.
அப்போது சித்தலக்குண்டு அருகில் லாரியில் மணல் கொண்டு சென்றதை தடுத்து நிறுத்த முயன்றுள்ளார். ஆனால் லாரியை டிரைவர் நிறுத்தாமல் சென்று விட்டார். அந்த லாரியை பின்தொடர்ந்து சென்று நிறுத்த முயன்ற துணை வட்டாட்சியர் மணல் கடத்தல் தொடர்பாக திருச்சூழி வட்டாட்சியருக்கு தகவல் அளித்துள்ளார்.
அதைத்தொடர்ந்து திருச்சுழி வட்டாட்சியர் காரில் மணல் கடத்திய லாரியை துரத்திச் சென்றபோது துணை வட்டாட்சியர் தனது இரு சக்கர வாகனத்தை சாலையோரமாக நிறுத்தி வைத்து விட்டு சென்றுள்ளார்.
மணல் கடத்திய லாரி அருகில் உள்ள கிராமத்திற்குச் சென்று மறைந்ததை அடுத்து தனது இரு சக்கர வாகனத்தை எடுக்க துணை வட்டாட்சியர் வந்தபோது வாகனம் அடித்து நொறுக்கப்பட்டு புதருக்குள் தள்ளி விட்டபடி இருந்தது தெரியவந்தது.
இதுகுறித்து துணை வட்டாட்சியர் திருச்சுழி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அதைத் தொடர்ந்து காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து நடைபெற்ற விசாரணையில் இருசக்கர வாகனத்தை அடித்து நொறுக்கியது மூவர் கொண்ட கும்பல் என தெரியவந்துள்ளது.
இருசக்கர வாகனத்தை சேதப்படுத்திய மூன்று பேர், திருட்டு மணல் அள்ளிய லாரி ஓட்டுனர், உதவியாளர் ஆகிய ஐந்து பேரையும் காவல்துறையினர் தேடி வருகின்றனர்.