திண்டுக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த அலங்காரம் மாசிலாமணி என்பவரின் மகன் அருச்சன்கார் (23). பொறியியல் பட்டதாரியான இவர் விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூரில் நடைபெறவிருந்த திருமண நிகழ்வு ஒன்றில் பங்கேற்க தனது நண்பர்களுடன் வந்தார்.
இந்நிலையில், நேற்று (மார்ச்2) குளிப்பதற்காக ஸ்ரீவில்லிபுத்தூர் வைத்தியநாத சுவாமி கோயிலின் எதிரே உள்ள தாமரை குளத்திற்கு நண்பர்களுடன் சென்றுள்ளார். குளத்தில் ஒருவர் பின் ஒருவராக இறங்கி குளித்துக் கொண்டிருந்தபோது எதிர்பாராதவிதமாக இளைஞர் அருச்சன்கார் குளத்திற்குள் தவறி விழுந்துள்ளார். நீச்சல் தெரியாததால் அவர் நீரில் மூழ்கியதாகக் கூறப்படுகிறது.
இதைப் பார்த்த அவரது நண்பர்கள் அதிர்ச்சி அடைந்து குளத்தில் தேடினார்கள். ஆனால் அவர்களால் இளைஞரை கண்டுபிடிக்க முடியவில்லை.
இது குறித்து உடனடியாக காவலர்களுமம், ஸ்ரீவில்லிபுத்தூர் தீயணைப்பு நிலையத்திற்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த அவர்கள் குளத்தில் மூழ்கிய அருச்சன்காரின் உடலை மீட்டு வெளியே கொண்டு வந்தனர். உடலை மீட்ட காவல்துறையினர், அரசு மருத்துவமனைக்கு உடற்கூராய்வுக்காக அனுப்பி வைத்தனர்.
இதுதொடர்பாக ஸ்ரீவில்லிபுத்தூர் காவலர்கள் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதையும் படிங்க : திமுக - காங்கிரஸ் தொகுதிப் பங்கீட்டில் இழுபறி