விருதுநகர் : இந்திய கலாசாரத்தையும் பாரம்பரியத்தையும் மக்கள் சிறிய கோயில்கள் எழுப்பி காத்து வருவதாக கொட்டும் மழையில் மத்திய மீன்வளம், கால்நடை பராமரிப்பு துறை மற்றும் தகவல் ஒலிபரப்பு துறை இணையமைச்சர் எல். முருகன் பேசினார்.
விருதுநகர் அருகே ரோசல்பட்டி கிராமத்தில் உள்ள இந்திரா நகர் குடியிருப்பில் புதிதாக கட்டப்பட்டு குடமுழுக்கு விழா நடந்த காளியம்மன் கோயில் கும்பாபிஷேகத்தில் மத்திய இணையமைச்சர் எல்.முருகன் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தார்.
முன்னதாக அப்பகுதி பொதுமக்கள் சார்பில் அமைச்சருக்கு மேளதாளங்கள் முழங்க உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. பின்னர் கும்பாபிஷேக யாகசாலை பூஜையில் கலந்து கொண்ட அமைச்சர் கோபுரத்தில் ஏறி கலசத்தில் புனிதநீர் ஊற்றி வழிபட்டார்.
இதையடுத்து, கொட்டும் மழையில் அங்கு குழுமியிருந்த பக்தர்கள் மற்றும் பொதுமக்களிடம் பேசிய அமைச்சர், “இந்தியாவையும், அதன் கலாசாரத்தையும், பாராம்பரியத்தையும் காக்கும் விதமாகவும் இந்து சமயத்தில் தங்களுக்கு உள்ள ஈடுபாட்டை காக்கவும் சிறிய கோயில்கள் எழுப்பி மக்கள் காத்து வருகின்றனர்.
என் வீட்டிற்கு சமைக்க பணம் இல்லாவிட்டாலும், வட்டிக்கு கடன் வாங்கி கோயில் கட்ட பணம் கொடுத்து தன்னுடைய பங்களிப்பை மக்கள் அளித்து தனது பங்களிப்பை உறுதி செய்து வருவது இந்தியாவில் இந்து மதத்தில் மட்டுமே நடக்கும் நிகழ்வு. பாரதப் பிரதமர் நரேந்திர மோடி கடைக்கோடி மக்களும் முன்னேறும் வகையில் அனைவருக்கும் வீடுகட்டும் திட்டம் கொண்டு வந்துள்ளார்.
கழிப்பறை சுகாதார வளாகம் ஏற்படுத்தி கொடுத்து அதை நாம் பயன்படுத்தி ஆரோக்கியத்திற்கு வித்திட்டுள்ளார். கரி அடுப்பே இல்லாத சூழ்நிலையை உருவாக்கி தந்தவரும் நமது பிரதமர்" எனக் கொட்டும் மழையில் அவர் பேசினார்.
இதையும் படிங்க : பிரதமருக்கு திருக்குறள் பரிசளித்த இணையமைச்சர் எல். முருகன்