விருதுநகர்: விருதுநகர் மாவட்டம் மண்டப சாலையில் பிரமாண்டமான ஒரு மரம் இருப்பதாகக் கிடைத்த தகவலின் பேரில், ராமநாதபுரம் தொல்லியல் ஆய்வு நிறுவனத்தின் தலைவர் வே.ராஜகுரு, அருப்புக்கோட்டை தேவாங்கர் கல்லூரி வரலாற்றுத்துறை உதவிப் பேராசிரியர் செ.ரமேஷ் ஆகியோர் அங்கு ஆய்வு செய்தனர்.
இதுகுறித்து பேசிய ராமநாதபுரம் தொல்லியல் ஆய்வு நிறுவனத்தின் தலைவர் வே.ராஜகுரு, 'இம்மரம் 7 மீட்டர் உயரமும், 11 மீட்டர் சுற்றளவும் கொண்ட பிரமாண்டமாக காட்சியளிப்பதாகவும், இது ஆப்பிரிக்கா, மடகாஸ்கர், ஆஸ்திரேலியா, அரேபியா போன்ற நாடுகளில் அதிகமாக வளர்ந்து வரும் மரம்' என்றும் தெரிவித்தார்.
'இயற்கையாக உருவாகக் கூடிய பெரிய அளவிலான பொந்துகள், யானை போன்ற மிகப் பிரமாண்டமான அடிமரம் ஆகியவை இம்மரத்தின் சிறப்புகள்' என்றும் தெரிவித்தார். 'இம்மரத்தில் தண்டின் நடுவில் 10 பேர் அமரும் வகையில் பெரிய பொந்து உருவாகியுள்ளது. இம்மரங்கள் சாதாரணமாக இரண்டாயிரம் ஆண்டுகளுக்கும் மேல் உயிர் வாழ்பவை' என்றும் தெரிவித்தார்.
'இம்மரம் யானை போன்ற அமைப்பில் உள்ளதால், அப்பகுதியைச் சேர்ந்த மக்கள் இம்மரத்தை தெய்வமாக வழிபட்டு வருகிறார்கள். ராமநாதபுரம் மாவட்டத்தில் ராமேஸ்வரம், தங்கச்சிமடம், ராமநாதபுரம், தேவிபட்டினம், சேந்தனேந்தல், அழகன்குளம், ஏர்வாடி தர்கா, புல்லந்தை, மும்முடிச்சாத்தான், தேரிருவேலி, அருங்குளம், பனைக்குளம் போன்ற கடற்கரையோர ஊர்களிலும், வணிகப் பெருவழிகளிலும் இம்மரம் காணப்படுகிறது' என்றும் தெரிவித்தார். 'மரத்தின் வயது ஆயிரம் ஆண்டுகளைக் கடந்த பின்பே, அதில் பொந்து உண்டாகிறது. எனவே பொந்து உள்ள இம்மரம் ஆயிரம் ஆண்டுகள் பழமையானது' எனக் கருதலாம் என்றும் கூறினார்.
இதையும் படிங்க: 93 வயதான முதியவருக்கு ரோபோட்டிக் மூலம் இதய அறுவை சிகிச்சை: அப்போலோ சாதனை!