விருதுநகர் மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் இன்று அதிகாலை முதல் பரவலான மழை பெய்துவருகிறது. சாத்தூர், சிவகாசி, ராஜபாளையம் போன்ற மாவட்டத்தின் முக்கியமான பகுதிகளில் தொடர் மழை பெய்து வருவதால் சிவகாசி மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் உள்ள பட்டாசு ஆலைகளில் இறுதிக்கட்ட பட்டாசு உற்பத்தி பாதிப்படைந்துள்ளது.
இதன் காரணமாக இன்று மட்டும் 500க்கும் மேற்பட்ட பட்டாசு தொழிற்சாலைகளில் வேலை நிறுத்தப்பட்டுள்ளது. சிவகாசி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் 1,070 பட்டாசு ஆலைகள் இயங்கிவருகின்றன. இம்மாதம் 27ஆம் தேதி தீபாவளி பண்டிகை கொண்டாடப்படுவதையொட்டி பட்டாசு ஆலைகளில் இறுதிக்கட்ட பட்டாசு உற்பத்தி வேகமாக நடைபெற்றுவருகிறது.
ஏற்கனவே கடந்த ஆண்டுகளில் பட்டாசு உற்பத்தி, விற்பனை ஆகியவற்றுக்கு தடைக் கோரி உச்ச நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கு, பட்டாசு உற்பத்தியில் பேரியம் பயன்படுத்த தடை, சரவெடி தயாரிக்க தடை போன்ற பல்வேறு காரணங்களாலும் பசுமை பட்டாசு மட்டுமே உற்பத்தி செய்ய வேண்டும் போன்ற நிபந்தனைகளாலும் பட்டாசு உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது.
இந்த சூழ்நிலையில் மழை பெய்து பட்டாசு உற்பத்தியை பாதிப்படையச் செய்துள்ளது. இதனால் பட்டாசு உற்பத்தி தொழிலாளர்கள் வேதனையடைந்துள்ளனர்.
இதையும் படிங்க:'தீபாவளிக்கு பட்டாசே வெடிக்காத அதிசய கிராமம்'