மழைக்கு ஆதாரமாக விளங்கும் மரங்கள் இயற்கையின் கொடையாகும். அதன் முக்கியத்துவத்தை வலியுறுத்தி நாடு முழுவதும் பல்வேறு சுற்றுச்சூழல் ஆர்வலர்கள், தொண்டு நிறுவனங்கள், கல்வி நிறுவனங்கள் உள்ளிட்டவை விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகின்றன.

அந்தவகையில், விருதுநகர் மாவட்டம், நகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் மரங்களின் முக்கியத்துவத்தை உணர்ந்து மாணவிகளின் தங்களது பிறந்தநாள் கொண்டாட்டத்தின் பாகமாக மரம் நடுவதை ஒரு முக்கிய நிகழ்வாக நடத்தி வருகின்றனர். இந்த கல்வியாண்டு முதல் பள்ளியில் பசுமை புரட்சியை ஏற்படுத்துவதே தங்கள் இலட்சியம் என்ற உயர்ந்த நோக்கத்தோடு மாணவிகள் மற்றும் ஆசிரியர்கள் செயல்படுகின்றனர். இப்பள்ளியில் படிக்கும் மாணவிகளின் பிறந்தநாளன்று அந்த மாணவியின் கையால் மரக்கன்று நடும் பழக்கத்தை பள்ளியின் தலைமை ஆசிரியர் தொடங்கி வைத்துள்ளார்.
மேலும் காலை, மாலை என இருவேளையும் மரங்களுக்கு தண்ணீர் பாய்ச்சுவது, தேவையற்ற களைச்செடிகளை அகற்றுவது போன்ற வேலைகளில் மாணவிகள் ஆர்வத்துடன் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் இந்த பள்ளி வளாகம் தூய்மையாகவும் குளிர்ச்சியாகவும் காணப்படுகிறது.
பொது இடங்கள், சாலை ஓரங்களில் மரக்கன்று நடுவதற்கு நகராட்சி நிர்வாகமும், மாவட்ட நிர்வாகமும் அனுமதி அளித்தால் மாணவிகள் மூலம் இந்த திட்டத்தை நடைமுறைப்படுத்த தாங்கள் தயாராக இருப்பதாக பள்ளி நிர்வாகம் தெரிவித்துள்ளது.

இது பற்றி கருத்து தெரிவிக்கும் மாணவிகள், மரங்களை நடுவதற்கு இயலவில்லை என்றாலும், அதனை அழிக்காமல் பாதுகாக்க வேண்டும் என கேட்டுக்கொண்டனர்.