விருதுநகர் மாவட்டம் மேலத் தெருவைச் சேர்ந்தவர் பாலமுருகன் (35). இவர் அதே பகுதியில் கூலி வேலை செய்து வருகிறார். இன்று அதிகாலை இருசக்கர வாகனத்தில் விருதுநகரிலிருந்து அருப்புக்கோட்டைக்குச் செல்லும் வழியில் பாலமுருகனின் கட்டுப்பாட்டை இழந்த இருசக்கர வாகனம், தனியார் கல்லூரி அருகே அமைந்துள்ள மைல்கல்லில் வேகமாக மோதியது.
இதில், பாலமுருகன் தலைக்கவசம் அணியாமல் சென்றதால் விபத்தில் தலையில் பலத்த காயமடைந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். விபத்து குறித்து தகவலறிந்து வந்த விருதுநகர் காவல் துறையினர், அவரது உடலை மீட்டு உடற்கூராய்வுக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.