விருதுநகர்: அருப்புக்கோட்டை வருவாய் வட்டாட்சியராகப் பணிபுரிந்துவருபவர் ரவிச்சந்திரன், தினமும் அருப்புக்கோட்டைக்கு அரசு வாகனத்தில் (பொலிரோ) வந்துசெல்வது வழக்கம்.
அந்த வகையில் ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளதால் நேற்று (ஜூன் 16) இரவு வரை ரோந்துப் பணிகளில் ஈடுபட்டு, பின் அதனை முடித்துவிட்டு அரசு வாகனத்தில் வீடு திரும்பியுள்ளார்.
அப்போது வட்டாட்சியர் சென்ற வாகனத்தை, சின்ன புளியம்பட்டி கிராம உதவியாளரும், ஓட்டுநருமான சுகுமாரன் ஓட்டிச் சென்றுள்ளார். அவருடன் மருது பாண்டியன் என்ற மற்றொரு ஓட்டுநரும் பயணித்துள்ளார்.

இந்நிலையில் வட்டாட்சியர் ரவிச்சந்திரனை வீட்டில் இறக்கிவிட்டு மீண்டும் அருப்புக்கோட்டைக்குத் திரும்பியபோது, பெரிய வள்ளிகுளம் அருகே எதிர்பாராதவிதமாக வட்டாட்சியர் வாகனம் எதிரே வந்த லாரி மீது நேருக்கு நேர் மோதி விபத்து ஏற்பட்டுள்ளது.
இவ்விபத்தில், வட்டாட்சியரின் வாகனம், லாரியின் அடியில் சிக்கி கிராம உதவியாளர் சுகுமாரன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். உடன் சென்ற ஓட்டுநர் மருதுபாண்டியன் படுகாயமடைந்துள்ளார்.

இது குறித்து தகவல் அறிந்த காவல் துறையினர், தீயணைப்புத் துறையினர் உதவியுடன் வாகனத்தில் சிக்கி உயிருக்குப் போராடிக் கொண்டிருந்த ஓட்டுநர் மருதுபாண்டியனை மீட்டு சிகிச்சைக்காக விருதுநகர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.
அங்கு அவருக்கு முதல் உதவி அளித்து, மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். மேலும் உயிரிழந்த கிராம உதவியாளர் சுகுமாரின் உடலைக் கைப்பற்றி உடற்கூராய்விற்காக விருதுநகர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.
இதனை தொடர்ந்து, விபத்து குறித்து காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்தனர். பின் விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.
இதையும் படிங்க: 'என்னது பிரியாணி பிடிக்கலையா...' வாடிக்கையாளர்களுக்கு அடி உதை