விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி சட்டப்பேரவைத் தொகுதிக்கான இடைத்தேர்தல் வரும் 21ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில், வேட்புமனு தாக்கல் முடிந்து இறுதி வேட்பாளர் பட்டியல் அறிவிக்கப்பட்டது. இதையடுத்து திமுக, அதிமுக, சுயேட்சைகள் என 12 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர்.
இத்தொகுதியில் அரசியல் கட்சிகள் தீவிரமாகப் பரப்புரை செய்துவரும் நிலையில், தேர்தலை அமைதியாக நடத்தவும், பொதுமக்கள் அச்சமின்றி வாக்களிக்கவும், காவல் துறை சார்பில் விக்கிரவாண்டி பேரூராட்சியில் துணை ராணுவத்தினர் 200 பேரும், தமிழ்நாடு சிறப்பு காவல் படையைச் சேர்ந்த 300 பேரும் இணைந்து பங்கேற்ற காவல் துறையினர் அணிவகுப்பு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார் தலைமையில் நடைபெற்றது.
இந்தக் காவல் அணிவகுப்பின்போது விக்கிரவாண்டி பேரூராட்சியில் உள்ள முக்கியத் தெருக்களின் வழியாக, காவல் துறையினர் மிடுக்குடன் அணிவகுத்துச் சென்றது குறிப்பிடத்தக்கது.