கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகேயுள்ள எறையூர் காலனியைச் சேர்ந்த அண்ணாமலை என்பவரின் மகள் அருள்ஜோதி. இவர் அதே ஊரில் உள்ள பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு படித்துவந்தார்.
விடுமுறை நாளான நேற்று தன் தோழிகளான அன்சலாமி, ஜாஸ்மின், ஆயிஷாராணி, ஆஷாசெலின்மேரி ஆகியோருடன் அருகே உள்ள காட்டு கோயிலுக்குச் சென்றுவிட்டு ஏரியில் குளித்துள்ளனர்.
அப்போது, அருள்ஜோதி, ஆழமான பகுதிக்குச் சென்றதால் நிலைதடுமாறி நீரில் மூழ்கியுள்ளார். இதனைக்கண்ட தோழிகள் அவரைக் காப்பாற்றும் முயற்சியை மேற்கொண்டும் எவ்வித பலனில்லை.
அதன்பின், அவ்வழியாகச் சென்றவர்களின் உதவியுடன் அருள்ஜோதியை அரைமணி நேரம் போராட்டத்திற்கு பிறகு மீட்டு அருகிலுள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர்.
மாணவியை பரிசோதித்த மருத்துவர், அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாகத் தெரிவித்தனர். இது குறித்து தனியார் மருத்துவமனை நிர்வாகம் சார்பில் காவல் துறையினருக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது.
தகவலறிந்து விரைந்துவந்த எலவனாசூர்கோட்டை காவல் துறையினர் மாணவியின் சடலத்தை மீட்டு உடற்கூறாய்வுக்காக விழுப்புரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். மேலும், இந்த விபத்து குறித்து காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.
இதையும் படிங்க: ஏரியில் மூழ்கி ஒரே குடும்பத்தைச் சேர்ந்த இரண்டு சிறுமிகள் உயிரிழப்பு