இது குறித்து விழுப்புரம் மக்களவை உறுப்பினர் ரவிக்குமார் எழுதியுள்ள கடிதத்தில், "தமிழ்நாட்டிலுள்ள தனியார் பள்ளிகளில் பயிலும் மாணவர்களிடம் 2021-2022 ஆம் கல்வியாண்டுக்கு கட்டணக் குழு (Fee Committee) 2019-2020 ஆம் கல்வியாண்டுக்கு நிர்ணயித்த கல்வி கட்டணத்தில் (Tuition Fee) 75 விழுக்காடு கட்டணத்தை மட்டும் இரு தவணைகளில் வசூலித்துக் கொள்ளலாம் என சென்னை உயர் நீதிமன்றம் ஆணை பிறப்பித்துள்ளது. அதன் அடிப்படையில் தமிழ்நாடு அரசின் பள்ளிக்கல்வித்துறையும் நடவடிக்கை எடுத்ததை ஊடகங்களின் வாயிலாக அறிந்தேன்.
உயர் நீதிமன்றத்தின் அதே வழிகாட்டுதலின் அடிப்படையில் புதுச்சேரி பள்ளிக் கல்வி இயக்கத்தின் கட்டணக் குழு சுற்றறிக்கை ஒன்றை அனுப்பியுள்ளது. உயர் நீதிமன்ற ஆணையின் அடிப்படையில் 75 விழுக்காடு கட்டணம்தான் வசூலிக்க வேண்டும். பள்ளிகள் திறந்து நேரடி வகுப்புகள் நடத்தப்படும் வரை தனியார் பள்ளிகளில் ஆண்டு நிதி, பேருந்து கட்டணம் உள்ளிட்ட இதர கட்டணம் எதையும் வசூலிக்கக் கூடாது என்று கூறப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டிலுள்ள தனியார் பள்ளிகளில் பேரிடர் காலம் என்பதையும் கருதாமல் கல்விக் கட்டணம் மட்டுமின்றி பிற கட்டணங்களும் பெற்றோரிடம் வசூலிக்கப்படுகின்றன. ஆன்லைன் வகுப்புகள் மட்டுமே நடத்தப்படும் நிலையில், இதர கட்டணங்களை வசூலிப்பது மாபெரும் அநீதியாகும். கரோனா பெருந்தொற்றால் வருவாயின்றி வாடும் பெற்றோர் இதனால் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர்.
எனவே, புதுச்சேரி பள்ளிக் கல்வித்துறை அனுப்பியிருப்பதை போல தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறையும் இதர கட்டணம் எதையும் வசூலிக்கக்கூடாது என சுற்றறிக்கை ஒன்றை வெளியிட்டுக் கூடுதல் கட்டண வசூலை தடுத்து நிறுத்துமாறு கேட்டுக்கொள்கிறேன்" இவ்வாறு ரவிக்குமார் எம்.பி கூறியுள்ளார்.
இதையும் படிங்க: வரதட்சணை தீயில் கருகிய விஸ்மயா- நடந்தது என்ன?